திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, சந்திரபாபு நாயுடு பேசிய விடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பதி திருமலை கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வருகை தருகிறார்கள். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், புனிதமான கோவில் பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு மீது சந்திரபாபு எழுப்பியுள்ள குற்றச்சாட்டு ஆந்திரம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
விலங்குகளின் கொழுப்பு
சந்திரபாபுவின் விடியோவை பகிர்ந்து நாரா லோகேஷ் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“திருமலை வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோவில், மிகவும் புனிதமான கோவில். அந்த கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தில், நெய்க்கு பதிலாக ஜெகன் மோகனின் நிர்வாகம் விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஜெகன் மோகன் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸை நினைத்தால் அவமானமாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெகன் மோகன் படுதோல்வி
சமீபத்தில் நடைபெற்ற ஆந்திர பிரதேசத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
தெலுங்கு தேசம் தலைமையிலான பாஜக, ஜனசேனையின் தேசிய ஜனநாயகக் கூட்டணி, 175-இல் 164 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. தெலுங்கு தேசம் மட்டும் 135 தொகுதிகளில் வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.