
தீபாவளிக்குள் தலைநகர் தில்லியில் பள்ளமில்லாத சாலைகளாக உருவாக்க வேண்டும் அதிகாரிகளுக்கு அந்த மாநில முதல்வர் அதிஷி உத்தரவிட்டுள்ளார்.
அதிஷி தலைமையிலான அமைச்சர்கள் திங்கள்கிழமை காலை பொதுப்பணித்துறை பொறியாளர்களுடன் தெற்கு மற்றும் தென்கிழக்கு தில்லியில் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை ஆய்வு மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக முதல்வர் வெளியட்ட எக்ஸ் பதிவில்,
தில்லியில் உள்ள சாலைகள் அனைத்தும் சீரமைக்கும் பணியில் மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் என்எஸ்ஐசி ஓக்லா, மோமி மில் மேல்பாலம், சிராக் தில்லி, துகலகாபாத், மதுரா சாலை, ஆசிரம் சௌக் மற்றும் சுரங்கப்பாதை உள்ளிட்ட பழுதடைந்த சாலைகளை இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் மக்கள் மிகுந்த சிரமமடைந்துள்ளனர்.
போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளைத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அரவிந்த் கேஜரிவாலின் வழிகாட்டுதலின்படி தீபாவளிக்குள் பள்ளமில்லாத சாலைகளை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.
கிழக்கு தில்லியில் உள்ள சாலைகளை அமைச்சர் சௌரப் பரத்வாஜ் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக சிசோடியாவின் எக்ஸ் பதிவில்,
தில்லி மக்களுக்காக ஆம் ஆத்மி அரசு செய்துவரும் பணிகளை முடக்க பாஜக தன்னையும், முன்னாள் முதல்வர் கேஜரிவாலையும் போலி வழக்குகளில் சிறைக்கு அனுப்பியது. இதனால் தலைநகரில் சரியான சாலைகள் கூட இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளானர்.
அமைச்சர்கள் கோபால் ராய், கைலாஷ் கெஹ்லோட், இம்ரான் உசேன், முகேஷ் அஹ்லாவத் ஆகியோரும் சாலைகளை ஆய்வு செய்தனர்.
முன்னதாக ஞாயிறன்று நகரத்தில் உள்ள சாலைகளின் நிலையை மதிப்பாய்வு செய்ய ஒரு கூட்டத்தை நடத்தினார், மேலும் அனைத்து அமைச்சர்களும் ஒரு வாரத்திற்குள் நியமிக்கப்பட்ட பகுதிகளில் பழுதுபார்க்கும் சாலைகளை ஆய்வு செய்வார்கள்.
ஆய்வுக்குப்பின், சீரமைப்பு பணிகள் துவங்கி அக்டோபர் இறுதிக்குள் குண்டும் குழியில்லாத சாலைகளாக மாற்றப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.