/

நாடு முழுவதும் இந்த நோய் பரவிவருகிறது!: ராகுல் காந்தி

பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் 'வேலையின்மை' எனும் நோய் பரவிவருவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

News image
ஒடிசாவில் ராகுல்காந்தி | PTI
Updated On :7 பிப்ரவரி 2024, 12:13 pm

DIN

பாஜக ஆட்சியில் வேலையின்மை எனும் நோய் நாடு முழுதும் பரவிவருகிறது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். இந்த நோயால் எல்லா மாநிலங்களும் அவதிப்படுகின்றன என அவர் குற்றம் சாட்டினார். 

ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸின் நடைப்பயணம் ஒடிசா மாநிலத்தை அடைந்துள்ளது. அங்கு மக்களைச் சந்தித்துப் பேசிய அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டார்.

அதில் 'படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிலிருந்து 40% இளைஞர்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும் அதே நேரத்தில்தான் 1 லட்சத்திற்கும் அதிகமான அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன' என அவர் கூறினார்.

மேலும் '30 லட்சத்திற்கும் அதிகமான ஒடிசாவின் இளைஞர்கள் வெளி மாநிலங்களில் வேலை தேடி அலைகிறார்கள். மோடியின் ஆதரவால் வெளியிலிருந்து வந்த 30 கோடீஸ்வர தொழிலதிபர்கள் மாநிலத்தின் வளங்களைச் சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள்.' எனவும் அவர் குற்றம் சாட்டினார். 

'காங்கிரஸ் உருவாக்கிய பொதுப்பணித்துறை நிறுவனங்களான ரயில்வே, துறைமுகம், விமான நிலையங்கள் எல்லாம் பாஜகவால் தனியாருக்கு விற்கப்படுகின்றன. 

ஜிஎஸ்டி-யை சீர்திருத்துவதன் மூலமும், கண்மூடித்தனமான தனியார்மயமாக்கலை நிறுத்தி, பொதுப்பணித்துறைகளை மீட்டெடுத்து, அரசின் காலிப் பணியிடங்களை நிரப்புவதன் மூலமும் புதிய பொருளாதார மாதிரியை உருவாக்குவதே நமது முதன்மைக் கடமை' என ராகுல்காந்தி அந்தப் பதிவில் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.