தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ்நாடு அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு இன்று சந்தித்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் 8 பேர் கொண்ட குழு தில்லியில் இன்று சந்தித்தனர். மதிமுக பொதுச்செயலர் வைகோ, காங்கிரஸ் எம்.பி. கே.ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது சென்னை, தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை உடனே வழங்குமாறு அவர்கள் வலியுறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் டி.ஆர்.பாலு கூறியதாவது, மிக்ஜம் புயல், தென்மாவட்ட வெள்ள பாதிப்புக்கு தமிழ்நாடு அரசு கோரிய ரூ.37,907 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என கோரினோம்.
மேலும் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தோம்.
ஜன.15ஆம் தில்லி திரும்பும் மத்திய அரசின் குழு தரும் அறிக்கை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என அமித்ஷா கூறினார். நிதி வழங்குவது குறித்து வரும் 27ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் எனவும் அமித்ஷா உறுதி அளித்துள்ளார் என்றார்.