ஆங்கிலேயர்களிடமே அடிபணியாத காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் ஒருபோதும் அடிபணியாது என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவரது யாத்திரையின்போது காங்கிரஸ் கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனைக் குறிப்பிட்டு எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ஆங்கிலேயர்களுக்கே அடிபணியாத காங்கிரஸ் கட்சி, பாஜகவிடம் ஒருபோதும் அடிபணியாது.
எங்களது கட்சியில் இருந்து பாஜகவுக்கு சென்று முதல்வர் பதவி வகிப்பவர் எங்களையே அச்சுறுத்த முயல்கிறார். ராகுல் காந்தியின் நடைப்பயணத்தின் போது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சுவரொட்டிகளை கிழித்து, வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அவர் மீதே பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏராளமான ஊழல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை மறந்துவிட்டார்.
இதையும் படிக்க | மணிப்பூருக்கு பிரதமர் வாழ்த்து, கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்!
இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாதான் என்று ராகுல் காந்தி மிகச் சரியாக கூறியுள்ளார். சர்மா இன்று பாதுகாப்பாக இருப்பது மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரால்தான்.” என்று தெரிவித்துள்ளார்.