
சம்பலில் உள்ள ஜாமா மசூதியில் ஹிந்து மதச் சடங்குகள் செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் இங்கு ஏற்பட்ட கலவரம் காரணமாக மசூதிக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று சம்பல் மசூதிக்கு சென்ற 3 நபர்கள் அனைத்துப் பாதுகாப்பையும் மீறி அங்கு ஹிந்து மதச் சடங்குகளைச் செய்ய முயன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சனாதன் சிங், வீர் சிங் யாதவ், அனில் சிங் ஆகியோர் தில்லியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ’நாங்கள் மசூதியில் உள்ள விஷ்ணு ஹரிஹர கோவிலில் யாகம் நடத்த வந்தோம். ஆனால், எங்களைக் கைது செய்துவிட்டனர். இங்கு தொழுகை நடத்த அனுமதிக்கும்போது பூஜை நடத்தக்கூடாதா?” என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுபற்றி செய்தியாளர்களுடன் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் பிஷ்னோய், “3 பேரும் காரில் இந்தப் பகுதிக்கு வந்தனர். அவர்களை மசூதியின் அருகே கைது செய்துள்ளோம். பொது அமைதிக்கு கேடு விளைவிக்க முயன்ற 3 பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீண்டும் சம்பலுக்குள் நுழைய தடை விதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் என்பதால் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமான நடவடிக்கைகளில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பல் ஜாமா மசூதியில் கடந்த நவம்பர் 24 அன்று தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள சென்றதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அது கலவரமானது. இந்தக் கலவரத்தில் 4 பேர் பலியாகினர். பலருக்கும் காயம் ஏற்பட்டது.
அந்தப் பகுதியில் வகுப்புவாத பதற்றம் நிலவி வருவதால் மசூதிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.