
நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த விலை உயர்வினால், மானிய விலையில் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கான எரிவாயு உருளை விலை புது தில்லியில் ரூ.853 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை ரூ.818க்கு விற்பனையான எரிவாயு உருளை விலை ரூ.868க்கு விற்பனையாகும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு உருளை பெறுவோருக்கு ரூ.550 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இன்று வரை வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.803க்கு விற்பனையாகி வந்த நிலையில், அது இந்த விலை உயர்வு காரணமாக ரூ.853 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு சாதாரண மானியம் பெறும் பயனாளிகளுக்கும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு உருளை பெறும் பயனாளிகளுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, எரிவாயு சிலிண்டர் விலை மாதத்துக்கு ஒரு முறை அல்லது 15 நாள்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அண்மைக்காலமாக ஒவ்வொரு மாதமும் மாதத் தொடக்கத்தில் மாற்றியமைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது எரிவாயு உருளை விலை மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலையும் உயர்வது வழக்கம். மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றையும் கணக்கிட்டு எண்ணெய் நிறுவனங்கள் அதற்கேற்ப சமையல் எரிவாயு உருளையின் விலையை ஒவ்வொரு மாதமும் மாற்றி நிர்ணயித்து வருகின்றன.
அந்த வகையில், ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலைகள் மாற்றியமைக்கப்பட்டன. அப்போது, உணவகங்கள், தேநீா் கடைகள் உள்ளிட்ட வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் ரூ. 41 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
இதனால், சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,921.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அப்போது, வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஒரு வாரத்துக்குப் பின் தற்போது எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்பட்டுள்ளது.
சிலிண்டர் விலை நகருக்கு நகரம் மாறுபடும் என்பதால், இந்த விலை உயர்வால், தில்லியில் சிலிண்டர் விலை ரூ.853 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல சென்னையில் இதுவரை ரூ.818க்கு விற்பனையாகி வந்த சிலிண்டர் இனி ரூ.868க்கு விற்பனை செய்யப்படும். மும்பையில் இனி 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். கொல்கத்தாவில் அதிகபட்சமாக ரூ.879 ரூபாய்க்கு விற்பனையாகும்.
இதையும் படிக்க.. கலால் வரியால் பெட்ரோல், டீசல் விலை உயருமா? மத்திய அரசு பதில்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.