
புது தில்லி: மும்பை 26/11 தாக்குதலின்போது, தனது சாமர்த்தியத்தால் பல உயிர்களைக் காப்பாற்றிய தேநீர் கடைக்காரர், அஜ்மல் கசாப்புக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு சலுகைகள் எதையும் தஹாவூர் ராணாவுக்கு வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார்.
மும்பையில் மிகப் பிரபலமான தேநீர் கடைக்காரராக அறியப்படும் முகமது தௌஃபிக், சோட்டு சாய் வாலா என பலராலும் அன்போடு அழைக்கப்படுபவர்.
மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திய போது, தனது சாமர்த்தியத்தால் பலருக்கும் எச்சரிக்கைக் கொடுத்துக் காப்பாற்றி, உயிர் பலி கடுமையாக அதிகரித்திருக்க வேண்டிய சூழ்நிலையை மாற்றியவர் இந்த முகமது தௌஃபிக் என்ற சோட்டு சாய் வாலா.
பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்ட நிலையில், அமெரிக்காவிலிருந்து நாடு கடத்திக் கொண்டுவரப்படும் தஹாவூர் ராணா மும்பை சிறையில் அடைக்கப்படவிருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், பயங்கரவாதத் தாக்குதலை நேரடியாகப் பார்த்த முகமது தௌஃபிக், பயங்கரவாதி கசாப்புக்கு வழங்கப்பட்டது போல இவருக்கும் பல்வேறு வசதிகளை வழங்கக் கூடாது. கசாப்புக்கு பிரியாணி கொடுத்தது போன்ற தவறுகளை செய்யக் கூடாது. பயங்கரவாதிகளுக்கு என தனியாக சட்டம் இயற்றப்பட வேண்டும், அவர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்ட 2 - 3 மாதங்களில் தூக்கிலிடப்பட வேண்டும் என்று மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியுள்ளார்.