
சிறுபான்மையினர் மீது அனுதாபம் இருந்தால், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரை கட்சியின் தலைவராக காங்கிரஸ் கட்சி அறிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 14) தெரிவித்தார்.
தேர்தலிலும் முஸ்லிம் சமூகத்தினருக்கு காங்கிரஸ் 50% வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், அதில் வெற்றி பெற்றால் அவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படையான முன்வைக்கட்டும் எனவும் குறிப்பிட்டார்.
ஹரியாணா மாநிலம் ஹிசார் பகுதியில் மகாராஜா அக்ரசென் விமான நிலையத்தில் புதிய முனைய கட்டடத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 14) அடிக்கல் நாட்டினார். ஹிசார் - அயோத்தி இடையே பயணிகள் விமானத்தையும் தொடக்கி வைத்தார்.
இதில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பிரதமர் மோடி பேசியதாவது,
2014ஆம் ஆண்டுக்கு முன்பு நாட்டில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று 150 விமான நிலையங்கள் உள்ளன. 70 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் மட்டும்தான் கொண்டுவர முடிந்ததா? பாஜக ஆட்சியில் இன்று ஒவ்வொரு ஆண்டும் பயணிகள் விமானப் போக்குவரத்து சாதனை படைத்து வருகிறது.
விமான நிறுவனங்கள் புதிதாக 2,000 விமானங்களைக் கொண்டுவர பதிவு செய்துள்ளன. ஒருபுறம் நாட்டை இணைப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது. மறுபுறம் ஏழைகள் நலன் மற்றும் சமூக நீதியை உறுதி செய்யும் பணிகளில் இறங்கியுள்ளது.
தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள புதிய முனையமானது அடுத்த இரு ஆண்டுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
சுதந்திரத்தில் இருந்து 2013 வரை வஃக்ப் சட்டம் இருந்தது. ஆனால் வாக்கு வங்கியைக் கவர்வதற்காகவும், சில அடிப்படைவாதிகளை சமாதானப்படுத்தவும் அரசியல் நோக்கத்துடன் அதில் காங்கிரஸ் கட்சி திருத்தங்களைக் கொண்டுவந்தது. 2014 தேர்தலை இலக்காக வைத்து இந்த திருத்தங்கள் செய்யப்பட்டன.
காங்கிரஸ் கட்சிக்கு உண்மையிலேயே சிறுபான்மையினர் மீது அக்கறை இருந்தால், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கட்சியின் தலைமை பொறுப்பை வழங்க முடியுமா? காங்கிரஸ் அதனைச் செய்ய மறுப்பது ஏன்? தேர்தலில் 50% இடத்தை முஸ்லிம் சமூகத்துக்கு வழங்க வேண்டும். அதில் அவர்கள் வெற்றி பெற்றால், அவர்கள் நினைப்பதை அதிகாரப்பூர்வமாக முன்வைக்கட்டும்.
வக்ஃப் வாரியத்தில் ஆயிரக்கணக்கான ஹெக்டர் பரப்பளவிலான நிலங்கள் உள்ளன. இது உரியவர்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு பயன்படுத்தப்பட்டால், முஸ்லிம் இளைஞர்கள் இன்னும் பஞ்சர் ஒட்டி வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய தேவை ஏற்படாது எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு மாவட்டத்தில் வன்முறை!