
வஃக்ப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் மேலுமொரு மாவட்டத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளது.
மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, தற்போது தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. காவல் துறைக்குச் சொந்தமான பேருந்து கவிழ்க்கப்பட்டு, கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. வன்முறையைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிக எண்ணிக்கையிலான காவல் துறையினர் மாவட்டத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிடிஐ செய்தி நிறுவனத் தகவலின்படி, இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. பாங்கர் பகுதியில் காவலர்களுடன் நடைபெற்ற மோதலில் காவல் துறையின் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
மத்திய கொல்கத்தாவிலுள்ள ராம்லீலா திடலில், வஃக்ப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அக்கட்சியின் எம்.எல்.ஏ. நெளஷாத் சித்திக் பேசவிருந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஆதரவாளர்கள் பேரணியாகப் புறப்பட்டனர்.
இதற்கு அனுமதி மறுத்து, பேரணியில் ஈடுபட்ட இந்திய மதச்சார்பற்ற ஆதரவாளர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மோதலாக மாறியது.
இது குறித்துப் பேசிய காவல் துறை மூத்த அதிகாரி, ’’பேரணியைத் தடுத்து நிறுத்தியதில், காவல் துறையைச் சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். இதனால், அவர்கள் மீது தடியடி நடத்தி கலைக்க முயற்சித்தோம்’’ எனக் குறிப்பிட்டார்.
மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காவல் துறை வாகனங்களுக்கு தீயிட்டு கொளுத்தப்பட்டது. தண்டவாளங்களில் ரயில்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 200க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | நாட்டிலேயே முதல்முறை... இணையத்தில் லோக் அதாலத் சேவைகள்!