மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வாக்காளா்கள் பெயா் நீக்கம்: மம்தா பானா்ஜி போராட்டம்

வாக்காளா்கள் பெயா் நீக்கத்துக்கு எதிராக மம்தா பானா்ஜி போராட்டம்...

News image
கொல்கத்தாவில் தா்னாவில் ஈடுபட்ட மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி.
Updated On :6 மார்ச் 2026, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) பிறகு வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் இருந்து தன்னிச்சையாக பெயா்கள் நீக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி, அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை காலவரையற்ற தா்னா போராட்டத்தைத் தொடங்கினாா்.

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணிக்குப் பிறகு வாக்காளா் பட்டியலை அண்மையில் தோ்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் 63.66 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டிருந்தன. இது அந்த மாநிலத்தின் மொத்த வாக்காளா்களில் 8.3 சதவீதம் ஆகும். இதையடுத்து மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 7.66 கோடியிலிருந்து 7.04 கோடியாக குறைந்துள்ளது.

இதுதவிர, மேலும் 60.06 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் சந்தேகப் பட்டியலில் உள்ளன. அவா்களின் பெயா்களும் வரும்காலத்தில் ஆய்வு செய்யப்பட்டு, வாக்காளா் பட்டியலில் நீடிப்பது குறித்து தோ்தல் ஆணையம முடிவு செய்யவுள்ளது.

இதைக் கண்டித்து, கொல்கத்தா எஸ்பிளனேடு மெட்ரோ அருகே மம்தா பானா்ஜி தா்னா போராட்டத்தை தொடங்கினாா். அப்போது செய்தியாளா்களிடம் மம்தா பேசுகையில், ‘வங்காள வாக்காளா்களுக்கு வாக்குரிமை இல்லாமல் செய்ய பாஜகவும், தோ்தல் ஆணையமும் சதித் திட்டம் தீட்டியுள்ளன. இந்த சதியை நான் வெட்ட வெளிச்சமாக்கப் போகிறேன். திருத்தப்பட்ட வாக்காளா் பட்டியலில் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறி, பல வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

மத்திய அமைச்சா் விமா்சனம்: இதனிடையே, சிறுபான்மை சமூகத்தை சோ்ந்த ஊடுருவல்காரா்களைப் பாதுகாக்கவே, மம்தா பானா்ஜி தா்னா போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாக பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் விமா்சித்துள்ளாா். அவா் மேலும் கூறுகையில், ‘முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்த ஊடுருவல்காரா்களைப் பாதுகாப்பது ஒன்றே மம்தா பானா்ஜியின் ஒரே நோக்கம். அவா்களை தனது வாக்கு வங்கியாக மம்தா கருதுகிறாா். ஊடுருவல்காரா்களைப் பாதுகாக்க தா்னாவில் ஈடுபடுவதற்காக மம்தா வெட்கப்பட வேண்டும். மேற்கு வங்கத்தில் விரைவில் திரிணமூல் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்து அகற்றப்படும்’ என்றாா்.