தலையிலிருந்த பெரிய பை விழுந்ததே தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலுக்குக் காரணம்: அஸ்வினி வைஷ்ணவ்

தலையிலிருந்த பெரிய பை விழுந்ததே தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலுக்குக் காரணம் என அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்
தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல்
தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல்PTI
Published on
Updated on
1 min read

புது தில்லி: ஒரு பயணியின் தலையில் இருந்த மிகப்பெரிய மூட்டை பிற பயணிகள் மீது விழுந்ததன் தொடர்ச்சியாகவே, பிப். 15 தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் நேரிட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்றத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

கடந்த பிப்.15-ஆம் தேதி புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 போ் உயிரிழந்தனா். மகா கும்பமேளா நடைபெற்று வந்த பிரயாக்ராஜுக்கு ரயில்களில் ஏறுவதற்காக காத்திருந்த பயணிகளின் கூட்டம் அதிகரித்ததன் காரணமாக இந்த நெரிசல் சம்பவம் நேரிட்டது.

தில்லி கூட்ட நெரிசல் குறித்து வெள்ளிக்கிழமை, மாநிலங்களவையில் விளக்கம் அளித்த மத்திய அமைச்சர், விபத்து குறித்து அமைக்கப்பட்ட உயர்நிலை விசாரணைக் குழுவினர் விசாரணையில் இந்த தகவல் தெரிய வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சி எம்.பி. எழுப்பிய கேள்விக்கு, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், புது தில்லி ரயில் நிலையத்தின் 14 மற்றும் 15வது நடைமேடைகளுக்கு இடையிலான படிகட்டில், பயணி ஒருவர் தலையில் வைத்திருந்த மூட்டை மற்றொரு பயணி மீது விழுந்ததின் தொடர்ச்சியாக, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 18 பேர் பலியானதாகக் கூறப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று, இரவு 8.15 மணிக்கு பயணிகளின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. பயணிகள் வைத்திருந்த மிகப்பெரிய பைகள்தான், கடும் நெரிசலையும் சிக்கலையும் ஏற்படுத்தியது. ஒரு பயணியின் தலையில் வைத்திருந்த பெரிய பை ஒன்று, கீழே விழ, அது மற்றொரு பயணி மீது விழுந்ததில், அவர் தடுமாறி விழுந்தபோது அடுத்தடுத்து நின்றிருந்தவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு நேரிட்டு 8.48 மணிக்கு கூட்ட நெரிசலாக மாறி ஒவ்வொருவராக விழுந்ததில், அவர்கள் மீது மற்றவர்கள் மிதித்து ஓடிய சம்பவத்தில் 18 பேர் பலியாகினர். 15 பேர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 33 பேரின் குடும்பங்களுக்கு இந்திய ரயில்வே தரப்பில் தலா ரூ.2 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com