
கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கால வரையறையற்ற வேலைநிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியுள்ளனர்.
இதனால், மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்து சேவைகள் முடங்கியுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கருத்து தெரிவித்த கர்நாடக உயர் நீதிமன்றம், போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியுள்ளனர்.
பெங்களூரு, சிக்கமகளூரு, ராய்ச்சூர், சித்ரதுர்கா, ஹுப்பள்ளி, தார்வாட், பெலகாவி, மங்களூரு, மைசூரு, தும்கூர், ஹாசன், மடிகேரி, சிவமொக்கா மற்றும் கலபுரகி போன்ற முக்கிய நகரங்களில் பேருந்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
போராட்டத்தில் பங்கேற்காத சில ஊழியர்களைக் கொண்டும் பயிற்சி ஓட்டுநரைக் கொண்டும் குறைந்தபட்ச அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.
தனியார் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுவதால், பயணிகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும், இந்த சூழலைப் பயன்படுத்தி தனியார் பேருந்து நிறுவனங்கள், ஆட்டோ ரிக்ஷா, வாடகை கார்கள் கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.