

தில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு 50% ஊழியர்கள் மட்டுமே வர தில்லி அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
மீதியுள்ள 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
தில்லியின் காற்றின் தரக் குறியீடு கடந்த சில வாரங்களாக மிக மோசமான நிலையில் உள்ளது. கடந்த திங்கள்கிழமை தில்லியில் காற்றின் தரக் குறியீடு 498 புள்ளிகளை எட்டி காற்று மிக மோசமான நிலையை அடைந்தது.
தில்லி காற்று மாசு குறித்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் முதல் பொதுமக்கள் வரை கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் பள்ளிகளுக்கு விடுமுறை (ஆன்லைன் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தல்), கட்டுமானத்துக்கு தடை, பிஎஸ்- 3 பெட்ரோல் மற்றும் பிஎஸ் -4 டீசல் நான்கு சக்கர வாகனங்களும் பழைய டீசல் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக தில்லியில் அலுவலகங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே நேரில் வந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தில்லியில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும், கண்டிப்பாக 50 சதவீதத்தைத் தாண்டக்கூடாது, மீதியுள்ள 50% ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும். இது நாளை(டிச. 18) முதல் அமலுக்கு வருவதாக தில்லி அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
அரசு அலுவலகங்களைப் பொருத்தவரை, அத்தியாவசிய மற்றும் அவசரப் பொதுச் சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய, நிர்வாகச் செயலாளர்கள் தேவைக்கேற்ப அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ அலுவலகத்திற்கு அழைக்கலாம்.
தனியார் அலுவலகங்கள் சுழற்சி முறையில் பணி நேரங்களை அமல்படுத்த வேண்டும், வீட்டிலிருந்து பணிபுரிவதற்கான விதிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அலுவலகப் பயணங்கள் தொடர்பான வாகனப் போக்குவரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.