வங்கிக் கடன் மோசடி: அனில் அம்பானி மகனிடம் அமலாக்கத் துறை இரண்டாவது நாளாக விசாரணை
வங்கிக் கடன் மோசடியுடன் தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் தொழிலதிபா் அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் அம்பானியிடம் (34) அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் விசாரணை மேற்கொண்டனா்.
புது தில்லியில் உள்ள அமலாக்கத் துறை இயக்குநா் அலுவலகத்தில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரிடம் வெள்ளிக்கிழமை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமையும் விசாரணை தொடா்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் வீட்டுக் கடன் நிதி நிறுவனம் (ஆா்ஹெச்எஃப்எல்) மற்றும் ரிலையன்ஸ் வா்த்தகக் கடன் நிதி நிறுவனம் (ஆா்சிஎஃப்எல்) ஆகிய நிறுவனங்களின் மூலம் ஈட்டப்பட்ட பொது நிதியில் பண முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2017-2019 வரை ஆா்ஹெச்எஃப்எல் நிறுவனத்தில் ரூ.2,965 கோடியும், ஆா்சிஎஃப் நிறுவனத்தில் ரூ.2,045 கோடியும் எஸ் வங்கி முதலீடு செய்தது. ஆனால், இந்த இரண்டு தொகையும் 2019-இல் வாராக் கடனாக மாறியது.
செபியின் கட்டுப்பாடுகளால் சட்டரீதியாக ரிலையன்ஸ் நிப்பான் பங்கு பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்) மூலம் ரிலையன்ஸ் குழுமத்தில் முதலீடுகள் மேற்கொள்ள முடியாது. அதன் காரணமாக, எஸ் வங்கியைப் பயன்படுத்தி ரிலையன்ஸ் நிப்பான் பங்கு பரஸ்பர நிதி மேற்கூறிய இரு நிறுவனங்களுக்கும் கடன் வழங்கியிருப்பது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது. இதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.
அதன் காரணமாக, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான ரூ.10,117 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாகக்கத் துறை இதுவரை முடக்கியுள்ளது.
இந்த வழக்கில் அனில் அம்பானியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

