
அஸ்ஸாமில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 9 ஆயிரம் பெண்கள் பாரம்பரிய நடனமாடி, பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தேயிலைத் தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு அஸ்ஸாமில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
முன்னதாக தலைநகர் கெளஹாத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வாகனப் பேரணி நடைபெற்றது. இதில் சாலையின் இருபுறமும் தொண்டர்கள், மக்கள் காத்திருந்து மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து கெளஹாத்தியில் உள்ள சரசுஜாய் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி கண்டுகளித்தார். இதில் தேயிலை பறிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 9 ஆயிரம் பெண்கள் கலந்துகொண்டு நடனமாடினர்.
பிரதமர் மோடியுடன் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா உடன் இருந்தார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி,
தேயிலை பறிக்கும் ஜூமோயர் பழங்குடியினத்தவர் மற்றும் அவர்களின் பாரம்பரியம் குறித்து அறிந்துகொள்ள நாடு முழுவதுமுள்ள மக்களுக்கு அழைப்புவிடுக்கிறேன். இன்றைய நிகழ்ச்சி நினைவுச் சின்னமாக என்றும் நினைவுகூரப்படும் எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.