மகா கும்பமேளா வெகுவிமரிசையாகத் தொடங்கவிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில், சமுதாய கூடங்கள் மூலம் ஒன்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு வழங்கும் திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக, ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையில், ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்து வரும் யோகி ஆதித்யநாத், மருத்துவமனையில் திட்டத்தைத் தொடங்கி வைத்து, தன் கையால் மக்களுக்கு உணவு வழங்கினார்.
இந்த திட்டத்தில் பருப்பு, நான்கு சப்பாத்திகள், காய்கறி, சாப்பாடு, சாலட் உள்ளிட்டவை, ஏழை மக்களுக்கு வெறும் ஒன்பது ரூபாய்க்கு வழங்கப்படவிருக்கிறது.
உணவு தயாரிக்கும் முறை, உணவு அளவு, தயாரிக்கப் பயன்படுத்தும் பொருள்கள் என அனைத்தையும் முதல்வர் நேரில் ஆய்வு செய்தார். மேலும், இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களுக்கு இந்த திட்டம் பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சமுதாயக் கூடத்தில், ஒரே நேரத்தில் 150 பேர் வரை அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு இடவசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.