அமலாக்கத்துறையிடம் பிரச்னை உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் குற்றச்சாட்டு

அமலாக்கத்துறையிடம் ஏதோ பிரச்னை உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் குற்றச்சாட்டால் பரபரப்பு
உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் குற்றச்சாட்டு
உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் குற்றச்சாட்டு
Published on
Updated on
2 min read

புது தில்லி: அமலாக்கத்துறையில் ஏதோ பிரச்னை உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சத்தீஸ்கர் மதுபான ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனுவை பரிசீலித்து வரும் உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ் ஓகா மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று நடைபெற்ற விசாரணையின்போது, ஜாமீன் மனுவுக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்திருக்கும் பதில் மனு "அரைவேக்காட்டுத்தனமாக உள்ளது" என்றும், புலனாய்வு அமைப்பின் ஆலோசனையை கேட்காமலேயே அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ தெரிவித்துள்ளார்.

நான் சார்ந்திருக்கும் துறையைப் பொறுத்த வரையில் ஏதோ கோளாறு இருக்கிறது. யாரையும் கலந்தாலோசிக்காமல், அவ்வளவு ஏன், கூடுதல் சொலிசிடர் ஜெனரலாகிய நாங்கள் ஆஜராவதற்கு முன்பே, நீதிமன்ற கவுண்டரில் அரைகுறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று எஸ்.வி. ராஜூ குற்றம்சாட்டியிருக்கிறார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் மீனாட்சி அரோரா பேசுகையில், இதுபோன்ற நடவடிக்கைகள், குற்றம்சாட்டப்பட்டவர்களை சிறையிலேயே வைத்திருப்பதற்கான ஒரு உக்தியைப் போல தெரிவதாகக் கூறினார்.

இதையடுத்து தனது வாதத்தைத் தொடங்கிய எஸ்.வி. ராஜூ, நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் ஏதோ மறைந்திருக்கிறது என்பதை நானும் உணர்ந்தேன். விசாரணை அமைப்புடன் கலந்தாலோசனை செய்யாமலும், விசாரணை அமைப்புகளிடம் உண்மைத் தன்மையை கேட்டறியாமலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த நீதிபதி அபய் எஸ். ஓகா, ஒரு வழக்கில், பிரமாணப் பத்திரம் அல்லது பதில் மனுவை வழக்குரைஞர் மூலமாகத்தான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார்.

எனவே, நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையே பதில் மனுவை தாக்கல் செய்துவிட்டதால், வழக்குரைஞரை குறைகூற முடியாது என்றும் அரசு தரப்பு வழக்குரைஞர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், அமலாக்கத் துறை தாக்கல் செய்த பதில் மனுவில் இருக்கும் குளறுபடிகள் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் என்று அமலாக்கத் துறை இயக்குநரிடம் கோரப்பட்டிருப்பதாகவும், பதில் மனுவில் பிரச்னைகள் இருக்கும் நிலையில் அதனை தாக்கல் செய்த அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதாகவும் எஸ்.வி. ராஜூ கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை வரை அதனை வைத்திருங்கள், நான் பிரமாணப் பத்திரத்தை சோதிக்க வேண்டும், இதில் ஏதோ மறைந்திருப்பதாக நான் உணர்ந்ததால்தான் என் தரப்பில் விசாரணை நடத்தினேன். இந்த துறையில் இதுபோன்ற தவறுகள் நேரக்கூடாது, எங்கள் வழியாக தாக்கல் செய்யப்படாததால், எங்களை குறை கூற முடியாது என்று கூறும் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

வாதத்தை ஏற்றுக்கொள்ளாத உச்ச நீதிமன்ற அமர்வு, அறிவுறுத்தல்கள் இல்லாமல் எவ்வாறு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியது. மேலும், அறிவுறுத்தல்கள் இல்லாமல் தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரத்தை நாங்கள் எப்படி ஏற்க முடியும்? என்று அமலாக்கத் துறைதான் சொல்ல வேண்டும் என நீதிபதி ஓகா கூறியிருக்கிறார்.

மேலும், இந்த பிரச்சினை மிகவும் தீவிரமானது என்றும் நீதிபதி ஓகா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com