
இந்தியாவில் கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட 5 தென்மாநிலங்களின் பங்களிப்பு அதிகம் என்று கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் ’கல்விச் சிந்தனை அரங்கு 2025’ இறுதிநாள் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (ஜன. 28) காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே பேசியதாவது:
“தொழில்துறையினர் எங்கு செல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம். நகரங்களைப் போன்று கிராமப்புறங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. பெங்களூருக்கு வெளியே அமைக்கப்படும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி வருகிறோம்.
இந்தியாவில் 30 கோடி வேலைகள் காலியாக உள்ளன, ஆனால் திறமையான பட்டதாரிகளுக்கு பற்றாக்குறை இருக்கிறது.
உலகின் திறன் வாய்ந்த நகரமாக கர்நாடகத்தை முன்னிறுத்துவேன். ஆனால், முதலீட்டு நகரமாக நிலைநிறுத்தப்படாது.
அனைவரும் செழித்து வளரக்கூடிய ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை நாங்கள் உருவாக்குகிறோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்குமான வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.
ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் முதலீடு செய்ய நிறுவனங்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் முதலீடு செய்யவிருந்த செமிகன்டெக்டர் நிறுவனங்கள் குஜராத்தில் முதலீடு செய்துள்ளன.
நாங்கள் இலவசங்களை அறிவித்தபோது விமர்சித்த பாஜக, தற்போது அதனைதான் செய்கிறது. இதை மிகப் பெரிய வியூகமாக கூறுகிறது.
ஒட்டுமொத்த வட இந்தியாவைவிட கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 தென்மாநிலங்களில் பங்களிப்பு அதிகம். கர்நாடக அரசு 100 ரூபாய் அளித்தால், மத்திய அரசு 12 ரூபாய் மட்டுமே தருகிறது. குறைந்தபட்சம் 30 ரூபாய் கோரும் மாநில அரசின் கோரிக்கையை நிராகரிக்கிறது.
பெங்களூருவின் சில பகுதிகளுக்கு நீங்கள் வந்தால், தமிழர்களை மட்டுமே காண்பீர்கள். கர்நாடகத்தில் தமிழ் படங்கள் 100 நாள்கள் ஓடுகின்றன” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.