
திராவிடக் கட்சிகளுடன் பயணித்தால் பாஜகவின் வாக்கு விகிதம் 2 சதவீதத்துக்கு மேல் உயராது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் ’கல்விச் சிந்தனை அரங்கு 2025’ இறுதிநாள் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (ஜன. 28) காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இதில், பொதுச்சேவையின் முக்கியத்துவங்கள் என்ற தலைப்பில் அண்ணாமலை பேசியதாவது,
“தமிழ்நாடு மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். தற்போது மாற்றத்தை நோக்கிய பாதையில் தமிழ்நாடு பயணிக்கிறது. தமிழக பாஜக வளர்ச்சி அடைந்து வருகிறது. 48 லட்சம் பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். 50 லட்சம் வாக்குகள் தாமரை சின்னத்துக்கு கிடைத்துள்ளது.
கடந்த 2 - 3 ஆண்டுகளில் பாஜகவின் குரல் தமிழகத்தின் கிராமப்புறங்களிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.
நாட்டில் அதிகம் மாசுபடும் ஆறுகளின் பட்டியலில் 5 ஆறுகள் தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தில் எது அதிகரித்து வருகிறது என்றால் அது டாஸ்மாக் கடைகள்தான். தமிழகத்தில் 43% மாணவர்களுக்கு கணக்கு பாடத்தில் எண்களே தெரியவில்லை; 25% மாணவர்களுக்கு கழித்தல் தெரியவில்லை; இதில் கல்வித் தரம் எங்கு உள்ளது.
திராவிட கட்சிகளுடன் பயணித்தால் பாஜகவின் வாக்கு சதவீதம் 2 சதவீதத்துக்கு மேல் உயராது.
திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு 50 சதவிகிதம் வாக்குகள் உள்ளன. திராவிடர் அல்லாத வலிமையான கூட்டணியை உருவாக்க முடியும் என்பதை பாஜக நிரூபித்துள்ளது. 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி 100 சதவிகிதம் ஆட்சிக்கு வரும். வளமான எதிர்காலத்துக்காக இளைஞர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
நான் என்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க விரும்புகிறேன். தற்போதைய அரசியல்வாதிகள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அதிகாரத்தால் இயக்கப்படுகிறது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.