

சிக்கிம் ராணுவ முகாம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 வீரர்கள் பலியாகினர்.
தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மணிப்பூா், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பரவலாக கனமழை நீடித்து வருகிறது.
தொடா் கனமழையால் வடகிழக்கு மாநிலங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், லாச்சென் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து, வடக்கு சிக்கிமின் சட்டென் பகுதியில் உள்ள ராணுவ முகாம் நிலச்சரிவால் ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்டது.
நிலச்சரிவில் சிக்கிய 3 வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான 9 வீரர்களை தேடும் பணியை ராணுவ வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, கடந்த மே 30 முதல் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக லாச்சுங் பகுதியில் சிக்கியிருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை மீட்க ராணுவத்தினர் முயற்சித்து வந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு சாலைகளில் இருந்த பாறைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்ட நிலையில், திங்கள்கிழமை காலை 1,600 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.