
ஏர் இந்தியா விமான விபத்தின்போது, பயணிகளின் உறவினர்களுக்குத் தகவல் சொல்ல ஏர் இந்தியா நிறுவனம் முயன்றபோது தோல்வியே மிஞ்சியது.
காரணம், அகமதாபாதிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் பலியான நிலையில், பெரும்பாலான பயணிகள், அவசர அழைப்புக்கான தொலைபேசி எண்ணில், தங்களது சொந்த எண்ணையே கொடுத்திருந்ததுதான் சோகத்தின் உச்சக்கட்டம்.
வியாழக்கிழமை பகல் 1.30 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் உள்பட 270 பேர் பலியாகினர்.
இந்த விபத்தினைத் தொடர்ந்து, ஏர் இந்தியாவில் பயணித்தவர்களின் விவரங்களை எடுத்து அவர்களது உறவினர்களுக்குத் தகவல் சொல்ல, உதவி மையமானது முயன்றபோது, பயணிகள் அளித்த அவசர உதவி எண்கள் பெரும்பாலும் அழைப்பை ஏற்காத நிலையில்தான் இருந்தன.
இது உதவி மையத்துக்கு மிகப்பெரிய சவாலாக மாறியது. இதற்குக் காரணம், பெரும்பாலான பயணிகள், அவசர அழைப்புக்கான எண்ணாக, உறவினர்களின் செல்போன் எண்ணுக்கு பதிலாக தங்களது செல்போன் எண்ணையே கொடுத்திருந்ததுதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. அதனால்தான், அழைப்புகள் ஏற்கப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.
விமான விபத்து நேரிட்ட ஒரு சில மணி நேரம் வரை, அவர்களது உறவினர்களுக்குத் தகவல் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. செய்திகள் மூலம் விமான விபத்து குறித்து அறிந்து உறவினர்கள், தாங்களாகவே விமான நிலையத்தைத் தொடர்புகொள்ளும் மோசமான நிலையும் ஏற்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையத்திலிருந்து, பலியான பயணிகளின் உறவினர்களைத் தொடர்புகொண்ட ஊழியர்கள், தங்களது பெரும்பாலான அழைப்புகள் ஏற்கப்படவில்லை. அப்போதுதான், அது அனைத்தும் பலியான பயணிகளின் எண், அந்த செல்போன்கள் விபத்தில் கருகிப் போயிருக்கும் என்று தெரிய வந்தது. இது சவாலானப் பணியை மேலும் சிக்கலாக்கியது என்கிறார்கள்.
இதையும் படிக்க.. விமானத்தில் அதிர்ஷ்டமான இருக்கையாக 11ஏ மீண்டும் நிரூபணம்! ஏன்? எப்படி?
இதைத் தொடர்ந்துதான், நாங்கள், பயணிகளின் ஊர்களைக் கண்டறிந்து, அவர்களது மாவட்ட ஆட்சியர்கள் மூலம், குடும்பங்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கு எடுக்குமாறு கேட்டுக்கொண்டோம் என்று கூறுகிறார்கள். எனவே, அவசர உதவிக்கான எண்ணை எப்போதும் யாருமே தங்களது சொந்த எண்ணை அளிக்க வேண்டாம் என்றும், நெருங்கிய உறவுகளின் செல்போன் எண்ணை மட்டும் வழங்க வேண்டும் என்றும், இதன் மூலம் ஒரு பாடம் கற்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.
விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும், 5 எம்பிபிஎஸ் மாணவர்கள் உள்பட விமானம் விழுந்த இடத்தில் இருந்த 29 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 80 பேரின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 33 பேரின் உடல்கள் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.