
கேரளத்தில் உள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
துறைமுகத்தை திறந்துவைப்பதற்காக பிரதமர் மோடி காலை 10.15 மணிக்கு திருவனந்தபுரம் நகரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் துறைமுகப் பகுதிக்கு வந்தார். பின்னர் தொப்பி ஒன்றை அணிந்து டிரான்ஷிப்மென்ட் மையத்தைச் சுற்றி நடந்துவந்து அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்தார்.
பின்னர், காலை 11.33 மணியளவில் கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன், அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி, திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆகியோர் முன்னிலையில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் திறந்து வைத்தார்.
திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள இந்த துறைமுகமானது, சர்வதேச கப்பல் வழித்தடத்தில் இருந்து 10 மைல் தொலைவில் அமைந்துள்ளது. சர்வதேச வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்தில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழிஞ்சம் துறைமுகத்தின் கிரேன்கள் முழுவதும் தானியங்கி வகையைச் சேர்ந்தது என்பதால் சரக்குகளை விரைவில் கையாள முடியும். பெரிய சரக்குக் கப்பல்கள் இலங்கையில் நிறுத்துவதற்குப் பதிலாக இந்தியக் கடற்கரைக்கே வருவதை உறுதிசெய்யும் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக மேம்பாட்டாளரும் அதானி குழுமத்தின் ஒரு பகுதியுமான அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல லிமிடெட் பொது-தனியார் கூட்டாண்மையின் கீழ் உருவாக்கியுள்ளது.
இதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, துறைமுகம் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி அதன் வணிக ரீதியான செயல்பாட்டுச் சான்றிதழைப் பெற்றது.
இந்தியாவின் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும். மேலும் பெரிய சரக்குக் கப்பல்களை நிறுத்த இடமளிக்கும் வகையிலும் இந்தத் துறைமுகம் வடிமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.