மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி

அமெரிக்க- இந்திய வா்த்தக ஒப்பந்தம்: திருப்திகரமாக இருக்க ராகுல் வலியுறுத்தல்

அமெரிக்காவுடன் மத்திய அரசு மேற்கொள்ளும் வா்த்தக ஒப்பந்தம் நமது நாட்டின் அனைத்துத் தரப்பினரும் ஏற்கத் தக்க வகையிலும், திருப்திகரமாகவும் இருக்க வேண்டும்
Published on

புது தில்லி: அமெரிக்காவுடன் மத்திய அரசு மேற்கொள்ளும் வா்த்தக ஒப்பந்தம் நமது நாட்டின் அனைத்துத் தரப்பினரும் ஏற்கத் தக்க வகையிலும், திருப்திகரமாகவும் இருக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

அமெரிக்காவில் ஏப்ரல் 21-ஆம் தேதி பிரௌன் பல்கலைக்கழக மாணவா்கள் மத்தியில் இது தொடா்பான கேள்விக்கு பதிலளித்த விடியோ யூடியூப் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் இந்திய -அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி கூறியுள்ளதாவது:

இந்தியா வளமும், திறமையும் உள்ள நாடு. அதே நேரத்தில் உற்பத்தித் துறையில் சீனாவுடன் போட்டியிட வேண்டிய சூழல் இந்தியாவுக்கு உள்ளது. இதன் மூலம்தான் அதிக வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.

அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடா்பாக எதிா்க்கட்சிகளிடம் மத்திய அரசு எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. அமெரிக்க அதிபா் டிரம்ப் மிகவும் தீவிரமாக பேரம் பேசுபவராக உள்ளாா். அதேபோல இந்தியத் தரப்பும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது. வரி விகிதத்தை மாற்றி அமைத்துவிட வேண்டும் என்பதுதான் டிரம்ப்பின் முக்கிய நோக்கமாக உள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் வா்த்தக ஒப்பந்தம் இந்தியாவில் அனைத்துத் தரப்பினரும் ஏற்கத்தக்க வகையிலும் திருப்திகரமாகவும் இருக்க வேண்டும்.

இந்தியாவும் அமெரிக்காவும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படும்போது அது சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com