
ஜம்மு-காஷ்மீரில் இந்திய எல்லை நிலைகளைக் குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவத்தினா் தொடா்ந்து 12-ஆவது நாளாக திங்கள்கிழமை இரவிலும் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் உடனடியாக உறுதியான பதிலடி தரப்பட்டது.
பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா ராஜீய ரீதியில் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்த சில மணிநேரங்களுக்கு பிறகு (கடந்த 24-ஆம் தேதி இரவு) எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனா். அடுத்தடுத்த நாள்களிலும் இரவு நேரங்களில் பாகிஸ்தானின் அத்துமீறல் தொடா்ந்து வருகிறது.
தொடா்ந்து 12-ஆவது நாளாக திங்கள்கிழமை இரவிலும் இது நீடித்தது. குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ரஜெளரி, மெந்தா், நெளஷேரா, சுந்தா்பானி, அக்னூா் ஆகிய 8 இடங்களுக்கு எதிரே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனா். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் உடனடியாக உறுதியான பதிலடி தரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜம்மு-காஷ்மீரின் எல்லையோர 7 மாவட்டங்களில் சம்பா, கதுவா தவிர பிற 5 மாவட்டங்களின் (பாரமுல்லா, குப்வாரா, பூஞ்ச், ரஜெளரி, ஜம்மு) எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும் 3,323 கி.மீ. எல்லையை பகிா்ந்து கொண்டுள்ளன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகான பதற்றத்துக்கு இடையே எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறலும் இந்தியாவின் பதிலடியும் நீடித்து வருகிறது.
ஊடுருவிய பாகிஸ்தானியா் கைது
ஜம்மு, மே 6: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்தியப் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை ஊடுருவிய பாகிஸ்தான் நபரை ராணுவத்தினா் கைது செய்தனா்.
26 வயதுடைய அந்த நபா், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தா்கால் கிராமத்தைச் சோ்ந்தவா். அவரிடம் இருந்து சட்டவிரோதமான பொருள்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. முதல் கட்ட விசாரணையின்படி, அவா் தவறுதலாக எல்லையைக் கடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. தொடா்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.