
இந்திய வான்வழியின் மூலம் பாகிஸ்தானுக்கு செல்லக்கூடிய 25 விமான வழித் தடங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலிருந்த பயங்கராவதிகள் முகாம்களை இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் அழிக்கப்பட்டது.
கடந்த ஏப்.24 ஆம் தேதியன்று இந்திய விமானங்களுக்கான வழித்தடங்களை பாகிஸ்தான் மூடியதைத் தொடர்ந்து ஏப்.30 ஆம் தேதியன்று பாகிஸ்தான் விமானங்களுக்கான வழித் தடங்களை இந்தியா மூடியது.
இந்நிலையில், இந்திய வான்வழியின் மூலம் பாகிஸ்தான் செல்லக்கூடிய சுமார் 25 விமான வழித் தடங்களை, அடுத்த அறிவிப்பு வரும் வரையில் மூட இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், இந்திய வான்வழியாக பாகிஸ்தான் சென்ற வெளிநாட்டு விமானங்களின் பாதைகளும் முடக்கப்பட்டுள்ளன.
இதனால், பாகிஸ்தான் செல்லும் வெளிநாட்டு விமானங்கள் மாற்று விமானப் பாதைகளின் மூலம் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய வான்வழியைப் பயன்படுத்துவதற்கு விமான போக்குவரத்துத் துறைக்கு பல்வேறு விமான நிறுவனங்களும் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இதனால், அந்நிறுவனங்களுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) இந்திய வான்வழி மற்றும் இந்தியாவின் அருகிலுள்ள கடல்பகுதிகளின் மீது விமானப் போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகின்றது.
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாதிகள் முகாம்களைத் தகர்க்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் அதிரடித் தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நாகாலாந்தின் 10 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகை!