ட்ரோன் தாக்குதல்: ராஜஸ்தானில் ரயில் சேவை பாதிப்பு!
இந்தியா - பாகிஸ்தான் இடையில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ராஜஸ்தானில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்திய எஎல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் நேற்று இரவு முதல் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் எதிரொலியாக, ராஜஸ்தானில் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பகத் கி கோத்தியிலிருந்து பார்மர் செல்லும் ரயிலும், பார்மரிலிருந்து பகத் கி கோத்தி செல்லும் ரயிலும், முனாபாவ் பகுதியிலிருந்து பார்மர் செல்லும் ரயிலும் பார்மர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு முனாபாவ் ரயில் நிலையம் செல்லும் ரயில் என நான்கு ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. சில ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜோத்பூர் - தாதர், ஜோத்பூர்-வாரணாசி எக்ஸ்பிரஸ் ரயில்கள் 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோத்பூரிலிருந்து காலை 8.25 மணிக்குப் பதிலாக காலை 11.25 மணிக்குப் புறப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.