
புது தில்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை உடனடியாகக் கூட்ட பிரதமருக்கு நாடாளுமன்ற இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களும் கடிதம் எழுதியுள்ளனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை உடனடியாகக் கூட்ட வேண்டும்’ என்ற எதிர்க்கட்சிகளின் ஒரே கோரிக்கையை பிரதமரிடம் வலியுறுத்திகொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், அதன்பின் ஏற்பட்டுள்ள சண்டை நிறுத்தம் ஆகியவைக் குறித்து மக்களும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளும் நாடாளுமன்றத்தில் விவாதிப்பது முக்கியமானது. இதன்மூலம், இனி எதிர்வரும் சவால்களை எதிர்கொள்வதற்கான நமது கூட்டு முயற்சியை வெளியுலகுக்கு காட்ட முடியும்.
இந்த கோரிக்கையை தீவிரமாகவும் உடனடியாகவும் நிறைவேற்ற கருத்தில் எடுத்துக்கொண்டு செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதே கருத்துகளை பிரதமருக்கு தாம் அனுப்பியுள்ள கடிதத்திலும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சுட்டிக்காட்டியிருக்கிறார். முக்கியமாக, மே 10 மாலை 5 மணியளவில் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தம் செய்ய சம்மதம் தெரிவித்துவிட்டதாக முதலில் சொன்னவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவருக்குப் பின் இந்தியாவும் பாகிஸ்தானும் அதனை அறிவித்தது. இது குறித்தும் மக்களவை மாநிலங்களவைகளில் விவாதிக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.