/

பாகிஸ்தான் பக்கம் காங்கிரஸ்: ராகுல் மீது பாஜக விமர்சனம்!

இந்தியாவின் ஆயுதப்படையை குறைத்து மதிப்பிடக் கூடாதென ராகுல் காந்தியை பாஜக அறிவுறுத்தல்

News image
ராகுல் காந்தி- கோப்புப் படம்
Updated On :23 மே 2025, 10:21 am

DIN

இந்தியாவின் ஆயுதப்படையை குறைத்து மதிப்பிடக் கூடாதென ராகுல் காந்தியை பாஜக அறிவுறுத்தியுள்ளது.

பயங்கரவாதம் தொடர்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை பிரதமர் நரேந்திர மோடி நம்பியது ஏன்? என்ற கேள்வியையடுத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு கேள்வியெழுப்பிய ராகுல் காந்தி குறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா தெரிவித்ததாவது, ``இந்தியாவை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பு, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அவரின் நிலைப்பாட்டை ஒவ்வோர் இந்தியரும் உணர்ந்துள்ளனர். பாகிஸ்தானுக்குள் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தை இந்தியர்களும் பிரதமரும் கொண்டாடுகின்றனர்.

ஆனால், இந்திய ராணுவம் மீது காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. பாகிஸ்தானுடன் அவர்கள் தொடர்பில் இருப்பதுபோலத் தெரிகிறது. தேசிய விமர்சனங்களில் காங்கிரஸ் ஏன் பாகிஸ்தான் பக்கம் இருப்பதாக மக்கள் கேள்வி கேட்கின்றனர். காங்கிரஸ், நாட்டின் பெரிய கட்சியாக இருந்தாலும், பாகிஸ்தானின் கைகளில் அது ஒரு நாய்க்குட்டியாக மாறிவிட்டது.

ராகுல் காந்தி, எதிர்க்கட்சித் தலைவரா அல்லது நிஷான்-இ-பாகிஸ்தான் (பாகிஸ்தானின் தேசிய நலனுக்கான மிக உயரிய விருது) தலைவரா என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். நமது வலிமையான மற்றும் துணிச்சலான ஆயுதப்படைகளின் அர்ப்பணிப்பை குறைத்து மதிப்பிடக் கூடாது; இனிமேலும், அவை குறித்து கேள்வி எழுப்பக் கூடாது. அவ்வாறான சந்தேகம், தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும்’’ என்று கூறினார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்டை நிறுத்தம் ஏற்பட்ட பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, பயங்கரவாதத்துக்கு ஆதரவில்லை என்ற பாகிஸ்தானின் உறுதிமொழியை இந்தியா கவனத்தில் கொண்டதாக அவா் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமரின் இந்த உரையைக் குறிப்பிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``பிரதமா் மோடி, பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன், அமெரிக்க அதிபா் டிரம்ப்பிடம் பணிந்ததன் மூலம் இந்தியாவின் நலன்களை தியாகம் செய்தது ஏன், கேமராக்களின் முன்னால் மட்டும் உங்களின் ரத்தம் கொதிப்பது ஏன், பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை திடீரென நிறுத்தியதன் மூலம் நாட்டின் கெளரவத்தில் சமரசம் செய்தது ஏன்? என்று கேள்வியெழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.