

உத்தரப் பிரதேசத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஷூட்டரை காவல்துறையினர் வியாழக்கிழமை என்கவுன்டர் செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச சிறப்பு காவல் படை மற்றும் தில்லி போலீஸ் இணைந்து நடத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்ட லாரன்ஸ் குழுவைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர், கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் என்று காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹாபூர் கோட்வாலி பகுதியில் புதன்கிழமை இரவு சட்டவிரோத கும்பலைத் தேடிச் சென்ற சிறப்புப் படையைச் சேர்ந்த காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நவீன் குமார் என்ற குற்றவாளி படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
உயிரிழந்த நவீன் குமார், காஜியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு ஷூட்டராக பணிபுரிந்து வருபவர் என்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் உத்தரப் பிரதேசம் மற்றும் தில்லி காவல்துறையால் தேடப்பட்டு வந்தவர்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தியது, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திகியை கொலை செய்தது உள்ளிட்ட சம்பவத்துக்கு காலிஸ்தான் பயங்கரவாதியான லாரன்ஸ் பிஷ்னோய் குழு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.