ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
87 பாடங்களுக்கான 2026 யுஜிசி நெட் தேர்வு ஜூன் 22 முதல் ஜூன் 30 வரை நடைபெற்றது. இதில், ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு பிழைகள் இருப்பதாகப் புகார்கள் எழுந்தது.
இந்த நிலையில் மூன்று பாடங்களுக்கும் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”மோடி அவர்களே, உங்கள் தேசிய தேர்வு முகமை அமைப்பு இப்போது என்ன செய்திருக்கிறது என்று பாருங்கள்.
ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தவறான வினாத்தாள்களை அமைத்ததாலும், பழைய கேள்விகளையே மீண்டும் கேட்டதாலும் சமூகவியல், ஆங்கிலம் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான யுஜிசி-நெட் தேர்வை ரத்து செய்துள்ளது.
பல ஆண்டுகளாகத் தயாராகி, விண்ணப்பங்களை நிரப்பி, கட்டணம் செலுத்தி, தொலைதூரத் தேர்வு மையங்களுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான தேர்வர்கள், இப்போது செப்டம்பர் மாதத்தில் இவை அனைத்தையும் மீண்டும் செய்ய வேண்டியுள்ளது. தவறு செய்வது என்டிஏ, ஆனால் தண்டனையை அனுபவிப்பது மாணவர்கள்.
மீண்டும் சொல்கிறேன், என்டிஏ என்பது கல்வி அமைப்பு அல்ல. ஒரு சுரண்டல் இயந்திரம். இது மாணவர்களின் பணம், காலம், மனநலம், தன்னம்பிக்கை என அனைத்தையும் சுரண்டிவிட்டு, பதிலுக்கு வேலையைக் கூடத் தருவதில்லை.
தேர்வு நடைபெறுவதற்கு முன்பே இந்த வினாத்தாள்கள் கசிந்தனவா? என்ற கேள்விக்கு என்டிஏ இன்னும் பதிலளிக்கவில்லை.
மோடி அரசின் மற்ற எல்லா அமைப்புகளைப் போலவே, தேசிய தேர்வு முகமையும் தங்களின் தவறை ஒப்புக்கொள்வதில்லை. நம்பகத்தன்மை இழந்த மற்ற எல்லாத் தேர்வுகளைப் போலவே, என்.டி.ஏ.விடமும் எந்தப் பொறுப்புக்கூறலும் இருக்காது என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
தர்மேந்திர பிரதான் பதவி விலகியது முதல் படிதான், கடைசிப் படி அல்ல. தேசிய தேர்வு முகமையின் தலைமை நிர்வாகமும் பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டும்.
செப்டம்பர் மாதத்தில் மீண்டும் இந்தத் தேர்வை எழுதவிருக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் நான் சொல்வது இதுதான் - பிரச்னை உங்களிடம் இல்லை. ஒரு தேர்வைச் சரியாக நடத்த முடியாத ஒரு அமைப்பை பிரதமர் மோடி உருவாக்கினார். பிறகு அந்தத் தேர்வை எழுதும் மாணவர்கள் மீதே பழி சுமத்துகிறார். உங்களின் நேரமும் காலமும் திருடப்படுகின்றன. இதற்குப் பிரதமர் மோடி பதிலளிக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Are students being punished for the NTA's mistake? Rahul criticizes the cancellation of the NET exam!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







