
நேபாள வெள்ளம்! களமிறங்கும் இந்திய சுரங்க மீட்பு நிபுணர்கள் குழு!
நேபாள மீட்புப் பணிகளில் இந்திய சுரங்க மீட்பு நிபுணர்கள் குழு களமிறங்குவது பற்றி...

நேபாள வெள்ளம் - AP
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் நீர்மின் திட்டத்தின் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க இந்தியாவிலிருந்து நிபுணர்கள் குழு அனுப்பப்படவுள்ளன.
திபெத் எல்லையையொட்டி நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளம் அந்த நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுவரை 538 பேரின் சடலங்கள் நேபாள ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து கைலாஷ யாத்திரைக்கு சென்ற நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து சென்ற 103 பேரில் 21 மட்டுமே மீட்கப்பட்டு, இன்று தில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். மீதமுள்ளவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவல்கூட இதுவரை தெரியவில்லை.
இந்த நிலையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து தில்லிக்கு அழைத்து வரப்பட்ட 21 தமிழர்களை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எஸ். ஜெய்சங்கர் பேசியதாவது:
“நேபாள ராணுவத்தால் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். காத்மாண்டுவிலிருந்து அவர்கள் தில்லி வருவதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரகம் மேற்கொண்டது. மேலும், 85 பேர் மீட்கப்பட்டு பத்திரமாக இருக்கின்றனர். 315-க்கும் மேற்பட்ட இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
நேபாளத்தில் மக்களை மீட்பது மற்றும் நிவாரணப் பணிகளில் உதவுவதில்தான் எங்கள் கவனம் இருக்கிறது. இன்று காலைகூட நேபாள வெளியுறவு அமைச்சருடன் பேசினேன். நாங்கள் அவர்களுக்குப் பல்வேறு வகையான உதவிகளை வழங்க முன்வந்துள்ளோம்.
நேபாளத்தில் உள்ள ஒரு நீர்மின் திட்டப் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் மக்கள் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதால், அவர்களின் கோரிக்கையை ஏற்று சுரங்க மீட்பு நிபுணர்கள் குழுவை அனுப்பவுள்ளோம். மேலும், பெய்லி பாலங்கள், மருத்துவக் குழுக்களும் அனுப்பப்படும்.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் உதவி தேவைப்பட்டால், நாங்கள் அதையும் அனுப்புவோம்” எனத் தெரிவித்தார்.
நேபாளத்தில் ரசுவா மாவட்டத்தில் திரிசூலியில் செயல்பட்டு வரும் நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதை வெள்ளத்தில் நிலைகுலைந்தது. அதில், பணிபுரிந்த 63 இந்தியர்கள் உள்பட 350 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 100 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Summary
Nepal Floods! Indian Mine Rescue Expert Team Deployed!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







