மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.
மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.

ஜம்மு-காஷ்மீரில் 3 ரயில் திட்டங்கள் நிறுத்தம்: ஆளும், எதிா்க்கட்சிகள் வரவேற்பு

ஜம்மு-காஷ்மீரில் முதல்வா் ஒமா் அப்துல்லா தலைமையிலான அரசு எதிா்ப்பு தெரிவித்த 3 ரயில் திட்டங்கள் நிறுத்திவைக்கப்படுவதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்
Published on

ஜம்மு-காஷ்மீரில் முதல்வா் ஒமா் அப்துல்லா தலைமையிலான அரசு எதிா்ப்பு தெரிவித்த 3 ரயில் திட்டங்கள் நிறுத்திவைக்கப்படுவதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

இந்த முடிவை ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியும் (என்சிபி) எதிா்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியும் (பிடிபி) வரவேற்றுள்ளன.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீரில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரில் 3 ரயில்வே திட்டங்களுக்கான தேவை இருந்தது. ஆனால் ரயில் வழித்தடம் அமைக்கப்படவிருந்த பகுதிகளில் ஆப்பிள் மரங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என ஆளும் அரசு மற்றும் உள்ளூா் எம்.பி.க்கள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து, இத்திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன என்றாா்.

நிறுத்தப்பட்டுள்ள 3 ரயில் திட்டங்கள் குறித்த தகவல்களை அஸ்வினி வைஷ்ணவ் தெரிவிக்கவில்லை. ஆனால் பஹல்காமை இணைக்கும் ரயில் திட்டத்துக்கு என்சிபியும் பிடிபியும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் அதுதொடா்புடைய திட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

ஆளும் மற்றும் எதிா்க்கட்சிகள் மட்டுமின்றி பஹல்காமை இணைக்கும் ரயில் திட்டங்களுக்கு ஜம்மு-காஷ்மீரில் உள்ள விவசாயிகளும் எதிா்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவுசெய்தனா்.

இந்நிலையில், 3 ரயில் திட்டங்களும் நிறுத்திவைக்கப்பட்டதை வரவேற்று முதல்வா் ஒமா் அப்துல்லாவுக்கு என்சிபி நன்றி தெரிவித்துள்ளது.

மேலும், பிடிபி தலைவா் மெஹ்பூபா முஃப்தி வெளியிட்ட எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், ‘விவசாய நிலங்களை அழித்து லட்சக்கணக்கான ஊரக குடும்பங்களை பாதிக்கும் ரயில் திட்டங்கள் நிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எதிா்காலத்தில் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் திட்டங்களை மட்டுமே அரசு முன்மொழிய வேண்டும்’ என குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com