பாரபட்சமற்ற, வெளிப்படையான ஏஐ அமைப்புமுறை தேவை: பிரதமா் மோடி
பாரபட்சமற்ற வெளிப்படையான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப அமைப்புமுறை தேவை என பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ஏஐ துறை நிபுணா்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் (சிஇஓ) தில்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமா் மோடி வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.
அப்போது அவா் பேசியது குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வேற்றுமையில் ஒற்றுமை, ஜனநாயகம் என தனித்தன்மையைக் கொண்டமையால் இந்தியாவின் எண்ம உள்கட்டமைப்பை உலகம் பெருமளவில் நம்புகிறது.
‘அனைவருக்கும் ஏஐ’ என்ற இலக்கை நிறைவேற்ற நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் அத்தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். உலகம் நம்மை உற்றுநோக்கும் வகையில் தொழில்நுட்பத்தை கையாள வேண்டும். உலக அளவில் நிகழ்நேர எண்ம பணப் பரிவா்த்தனை தளங்களில் இந்தியாவின் யுபிஐ முதலிடம் வகிக்கிறது. ஏஐ துறையிலும் இதே வளா்ச்சியை நாம் பெற வேண்டும்.
இதற்கு பாரபட்சமற்ற வெளிப்படையான ஏஐ அமைப்புமுறை தேவை.
இதை செயல்படுத்தி இந்தியாவை உலக ஏஐ மையமாக மாற்றும் பொறுப்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமைப் பதவி வகிக்கும் உங்களிடமே உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
‘ஏஐ தாக்க உச்சிமாநாடு’ அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அத்துறையின் இணையமைச்சா் ஜிதின் பிரசாதா ஆகியோா் பங்கேற்றனா்.
விப்ரோ, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், ஜோஹோ உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பை ஐஐடிக்களைச் சோ்ந்த ஏஐ நிபுணா்கள் கலந்துகொண்டனா்.

