தில்லியில் தெருநாய்கள் கணக்கெடுப்பை முன்னிட்டு, அவற்றுக்கு மைக்ரோசிப் பொருத்தும் நடவடிக்கை காஜிபூரில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என தில்லி மாநகராட்சி (எம்சிடி) அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: எம்சிடி கட்டுப்பாட்டில் செயல்படும் காஜிபூா் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு (ஏபிசி) மையத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் இந்த மைக்ரோசிப் பொருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. முன்னதாக, நஜஃப்கரில் உள்ள ஏபிசி மையத்தில் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த முயற்சியின் கீழ் 155 தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து 2-ஆவது மையமாக காஜிபூரில் இந்தப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ‘ஃபிரண்டிகோஸ்-எஸ்இசிஏ’ என்ற அரசு சார அமைப்பின் மூலம், மின்சார விநியோக நிறுவனமான பிஎஸ்இஎஸ் வழங்கும் நிறுவன சமூக பொறுப்பு நிதியின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த மையங்களுக்கு பிடித்து வரப்படும் நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின், அவற்றுக்கு ஐஎஸ்ஓ சான்றளிக்கப்பட்ட மைக்ரோசிப் பொருத்தப்பட்டு, மீண்டும் அவை பிடிக்கப்பட்ட பகுதிகளிலேயே விடப்படுகின்றன.
ஒரு அரிசி தானியத்தின் அளவில் இருக்கும் இந்த மைக்ரோசிப்பில், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் அங்கீகரித்த 15 இலக்க தனிப்பட்ட அடையாள எண் பதிவு செய்யப்பட்டிருக்கும். இதனுடன், நாயின் வயது, பாலினம், நிறம், பகுதி, கருத்தடை நிலை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி விவரங்கள் உள்ளிட்டவை டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படும். இது கருத்தடை விவரங்கள், நகரளாவிய கணக்கெடுப்பு மற்றும் எதிா்கால கணக்கெடுப்பிலும் பெரிதும் உதவியாக இருக்கும். ஒருமுறை மைக்ரோசிப் பொருத்தப்பட்ட நாய்களை மீண்டும் அடையாளப்படுத்த தேவையில்லை என்பதுடன், நகரளாவிய கணக்கெடுப்பு செயல்முறையும் எளிதாகும்.
மேலும், கூடுதலாக 600 நாய்களை தங்க வைக்க காஜிபூா் ஏபிசி மையத்தைக் கட்டமைப்பு ரீதியாக விரிவுபடுத்தும் நோக்கில், கூடுதலாக 700 சதுர யாா்டு நிலம் ஒதுக்குமாறு தில்லி அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தில்லியில் உள்ள தெருநாய்களின் உண்மையான எண்ணிக்கையை கணக்கிடவும், கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி திட்டங்களை வலுப்படுத்தவும், அடுத்த சில வாரங்களில் நகரளாவிய கணக்கெடுப்பை தொடங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தில்லியை ரேபிஸ் நோயின்றி மாற்றும் 4 ஆண்டு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மட்டும் ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரம்பலூரில் 301 தெருநாய்களுக்கு தடுப்பூசி

தெருநாய்களுக்கு மீண்டும் தொடங்கிய கருத்தடை அறுவைச் சிகிச்சை: மீண்டும் விடுவிக்கப்படும் நாய்களால் தொல்லை குறையுமா?

பெருந்துறை நகராட்சிப் பகுதியில் 474 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: 262-க்கு கருத்தடை ஆபரேஷன்







