சபரிமலை கோயிலுக்கும் பக்தர்களுக்கும் தாழேமண் குடும்பம் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதால் இக்கோயில் தந்திரி (தலைமை அர்ச்சகர்) பதவியில் இருந்து இந்தக் குடும்பத்தை நீக்க வேண்டும் என்று கேரளத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் தந்திரியாக தற்போது பதவி வகிக்கும் கண்டரரு ராஜீவரு தனது மகன் பிரம்மதத்தனை இக்கோயிலின் அடுத்த தந்திரியாக நியமிக்குமாறு திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ள நிலையில், பாஜகவிடம் இருந்து மேற்கண்ட கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஃபேஸ்புக்கில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது: குற்றவியல் வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் பரிந்துரைக்கும் எந்த ஒரு நபரையும் வெறும் வாரிசு என்ற அடிப்படையில் தந்திரியாக நியமிக்க தேவஸ்வம் வாரியத்துக்கு எந்த அவசியமும் இல்லை.
சபரிமலை கோயிலுக்கும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கும் தாழேமண் குடும்பம் ஏற்படுத்தியதைப் போன்ற அவப்பெயரையும் துன்பத்தையும் வேறு எந்தக் குடும்பமும் ஏற்படுத்தவில்லை. எனவே தந்திரி பதவியில் இருந்து இக்குடும்பத்தினரை நீக்க வேண்டும்.
தாழேமண் குடும்பத்தின் மற்றொரு உறுப்பினரான முன்னாள் சபரிமலை தந்திரி கண்டரரு மோகனரும் பல்வேறு குற்றங்களை இழைத்துள்ளார். அவர் மீது கடந்த காலத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கில் ராஜீவரு குற்றம்சாட்டப்பட்ட நபராக இருக்கிறார். குற்றவியல் வழக்கைச் சந்தித்து வரும் ஒருவரிடம் இருந்து அவரது குடும்பத்தினருக்கு வாரிசு உரிமை மூலம் தந்திரி பதவி சென்றடைந்துவிடுமா என்பதை அறிய விரும்புகிறேன்.
கோயில் சடங்குகளில் தந்திரிகளுக்கு அதிகாரம் இருப்பதை நீதிமன்றத் தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன. அதேவேளையில், அவர்களை சட்டப்படி பதவி நீக்கம் செய்ய தேவஸ்வம் வாரியங்களுக்கு உரிமை உள்ளதை இத்தீர்ப்புகள் தெளிவாகக் கூறியுள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் அடுத்த தந்திரியை நியமிப்பதில் வாரிசு அடிப்படையை மட்டும் கொண்டு பார்க்காமல் தகுதி மற்றும் சட்டரீதியிலான அம்சங்களைக் கருத்தில் கொண்டு திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் முடிவு எடுக்க வேண்டும் என்று கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கில் தந்திரி ராஜீவரை கைது செய்ய வலியுறுத்தி பாஜக அண்மையில் போராட்டம் நடத்தியுள்ள நிலையில், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தற்போது வெளியிட்டுள்ள கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. அவரது இக்கருத்து தொடர்பாக தாழேமண் குடும்பத்திடமிருந்தோ, திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்திடம் இருந்தோ உடனடியாக பதில் ஏதும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!

சபரிமலை கூட்ட மேலாண்மைக்கு ஏ.ஐ. தொழில்நுட்பம்: தேவஸ்வம் வாரியம் தகவல்

பிரதமா் பதவியில் மோடி சாதனை: புதுச்சேரி பாஜகவினா் தங்கத்தோ் இழுப்பு







