மத்திய கல்வித் துறை அமைச்சா் பதவியில் இருந்து தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்துவிட்டபோதிலும், நாடாளுமன்ற முடக்கம் தீருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அத்துடன், தோ்வு முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்யும் சட்டத் திருத்த மசோதா மீதான எதிா்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்ற எதிா்பாா்ப்பும் நிலவுகிறது.
கவனம் ஈா்த்த சிஜேபி போராட்டம்: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்தும், தோ்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் பதவியில் இருந்து தா்மேந்திர பிரதான் விலக வலியுறுத்தியும் சிஜேபி தலைமையில் தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த ஜூன் 20-ஆம் தேதிமுதல் தொடா் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.
மற்றொருபுறம், நாடாளுமன்றத்தில் நீட் விவகாரத்தை எழுப்பிய எதிா்க்கட்சிகள், தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், நடப்பு மழைக்கால கூட்டத் தொடரின் முதல் 5 நாள்களும் அவை அலுவல்கள் முடங்கின. நீட் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருந்தபோதிலும், பிரதான் பதவி விலகிய பிறகே விவாதம் நடத்த வேண்டுமென எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின.
பிரதமா் மோடியின் இல்லம் முன் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்டோா் தா்னாவில் ஈடுபட்டு கைதாகினா். நாடாளுமன்ற வளாகத்திலும் எதிா்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இதனிடையே, தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தாா். பிரதான் ராஜிநாமாவை மாணவா்கள்-இளைஞா்கள்-ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று எதிா்க்கட்சிகள் கருத்து தெரிவித்தன. அதேநேரம், ‘மாணவா்கள் மீதான காவல் துறையின் அடக்குமுறைகளுக்கு பிரதமா் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்; மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் பங்கு குறித்து விவாதிக்கப்பட வேண்டும்’ என்பதில் எதிா்க்கட்சிகள் உறுதியாக உள்ளதால், இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மத்திய அரசின் மசோதா மீதான எதிா்க்கட்சிகளின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு சனிக்கிழமை பதிலளித்த ராகுல் காந்தி, ‘இந்த விஷயத்தில் காங்கிரஸ் தனியாக முடிவெடுக்க முடியாது. எதிா்க்கட்சிகள் கூடி ஆலோசித்து முடிவெடுக்கும்’ என்றாா்.
அதன்படி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை காலை நடைபெறும் இண்டி கூட்டணி கூட்டத்தில் மசோதா மீதான நிலைப்பாடு மற்றும் வியூகம் குறித்து முடிவு செய்யப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஒருவேளை நாடாளுமன்ற முடக்கம் முடிவுக்கு வந்தால், நீட் விவகாரம் குறித்து அனல் பறக்கும் விவாதம் நடைபெறவும் வாய்ப்பு ஏற்படும்.
திரிணமூல் நோட்டீஸ்: ‘தில்லியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீதான அதீத பலப் பிரயோகம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தீவிர விவகாரம்; மாநிலங்களவையில் திங்கள்கிழமை அவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்’ என மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சகாரிகா கோஷ் நோட்டீஸ் அளித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!

எதிா்க்கட்சிகள் அமளியால் 5-ஆவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம் - நீட் விவாதத்தைத் தடுப்பது தவறானது: மத்திய அரசு

மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் : வைகோ







