ஒடிசாவில், பாஜக ஆட்சியின் 2 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில், முதல்முறை பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்து நிகழாண்டில் (2026) 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையடுத்து, அதற்கான நிறைவு விழாவை மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாட மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், பாஜக ஆட்சியின் 2 ஆம் ஆண்டு நிறைவு விழா மயூர்பஞ்ச் மாவட்டத்தில் வரும் ஜூன் 20 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில், குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்பதை, ஒடிசா முதல்வர் அலுவலகம் இன்று (ஜூன் 2) உறுதி செய்துள்ளது.
இத்துடன், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்து பங்கேற்கும் இந்த நிகழ்வு அதிகளவில் கவனம் பெற்றுள்ளதுடன், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. இதனால், இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ஒடிசாவில் 2024 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது மூலம் பிஜு ஜனதா தளத்தின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.











