மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களில், தொடர்ந்து மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற சாதனையை வருகின்ற ஜூன் 10 ஆம் தேதி நரேந்திர மோடி படைக்கவுள்ளார்.
கடந்த 2014, மே 26 ஆம் தேதி முதல்முறையாக நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றார். வருகின்ற ஜூன் 10 ஆம் தேதியன்று பிரதமர் பதவியில் 4,399 நாள்களை நிறைவு செய்யவுள்ளார்.
முன்னதாக, நாட்டின் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு பிரதமராகப் பதவியேற்ற ஜவஹர்லால் நேரு, 1952 மே 13 முதல் 1964 மே 27, அவர் காலமாகும் வரை 4,398 நாள்கள் பிரதமராக இருந்தார்.
தற்போது இந்த சாதனையை நரேந்திர மோடி முறியடிக்கவுள்ளார். இந்த மைல்கல், மோடியின் அரசியல் பயணத்தில் மற்றொரு முக்கியச் சாதனையாக அமைகிறது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1966 ஜனவரி 24 முதல் 1977 மார்ச் 24, அவர் காலமாகும் வரை 4,077 நாள்கள் பிரதமராக இருந்தார். இந்த சாதனையை கடந்த 2025 ஜூலை 25 அன்று பிரதமர் மோடி முறியடித்தார்.
சுதந்திரத்துக்குப் பிறகு நேரு பிரதமராக இருந்தபோது, நாட்டின் மக்கள்தொகை சுமார் 34 கோடியாக இருந்தது. 2014 ஆம் ஆண்டு மோடி பதவியேற்றபோது 131 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 146 கோடியைக் கடந்துள்ளது.
கடந்த 70 ஆண்டுகளில், நாட்டின் ஜனநாயகமும் விரிவடைந்துள்ளது. 1951 முதல் பொதுத் தேர்தலில் 53 அரசியல் கட்சிகள் மட்டுமே போட்டியிட்ட நிலையில், 2024 பொதுத் தேர்தலில் 744 கட்சிகள் போட்டியிட்டது. முதல் பொதுத் தேர்தலில் 17 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 98 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், வருகின்ற ஜூன் 10 ஆம் தேதியுடன் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற சாதனையை மோடி படைக்கவுள்ளார். ஆறு தசாப்தங்களுக்குப் பிறகு நேருவின் சாதனை முறியடிக்கப்படுகிறது.
Summary
Longest-Serving Prime Minister! Modi Breaks Nehru's Record!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










