‘வாங்கும் திறன் சமநிலை (பிபிபி) அடிப்படையில் அளவிடப்படும் உலகளாவிய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (ஜிடிபி) பங்களிப்பில் வரும் 2060-ஆம் ஆண்டுக்குள் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்’ என்று உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் (டபிள்யுஐஎல்) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரீஸ் பொருளாதார (பிஎஸ்இ) கல்வி நிறுவத்தில் செயல்படும் இந்த ஆராய்ச்சி ஆய்வகம், உலகளவிலான சமத்துவமின்மை குறித்து தொடா் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது வெளியிட்ட ‘உலகளாவிய நீதி அறிக்கை: புவி எல்லைகளுக்கு உட்பட்ட சமத்துவம் மற்றும் செழிப்புக்கான திட்டம்’ என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகளாவிய ஜிடிபி-யில் சீனாவின் பங்கு தற்போது 20 சதவீதமாக உள்ளது. இது அமெரிக்காவின் பங்களிப்பைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு அதிகமாகும். வரும் 2035-இல், சீனாவின் இந்தப் பங்களிப்பு அமெரிக்காவின் பங்களிப்பைக் காட்டிலும் இரு மடங்காக உயர வாய்ப்புள்ளது.
எனினும், சீன மக்கள்தொகை எண்ணிக்கை மிக வேகமாக சரிந்து வருகிறது. அதன் காரணமாக, 21-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், உலகளாவிய ஜிடிபி-யில் சீனாவின் பங்கு சரியத் தொடங்கும். இதனால், வரும் 2060-ஆம் ஆண்டுக்குள் உலக ஜிடிபி பங்களிப்பில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும் என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஜிடிபி 4.15 டிரில்லியன் டாலா்: ‘உலகப் பொருளாதார கண்ணோட்ட (டபிள்யுஇஓ) அறிக்கையின்படி, 2026-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2025-ஆம் ஆண்டில் 3.92 டிரில்லியன் டாலராக இருந்தது, 2026-ஆம் ஆண்டில் 4.15 டிரில்லியன் டாலராக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் ஜிடிபி 4 டிரில்லியன் டாலரிலிருந்து 4.27 டிரில்லியன் டாலராக அதிகரிக்கும் எனவும், ஜப்பான் ஜிடிபி 4.48 டிரில்லியன் டாலரிலிருந்து 4.38 டிரில்லியன் டாலராக குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜிடிபி 32.38 டிரில்லியன் டாலராகவும், சீனாவின் ஜிடிபி 20.85 டிரில்லியன் டாலராகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.










