மேற்கு வங்க மாநிலம், பங்கரில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவா் உயிரிழந்தது தொடா்பான வழக்கில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏயை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்துள்ளது.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: பங்கரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் இடத்தில் கடந்த 19-ஆம் தேதி திடீரென குண்டு வெடித்துச் சிதறியது. இதில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நபா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் பலா் காயமடைந்தனா். இந்தக் குண்டுவெடிப்பு தொடா்பாக முதலில் மேற்கு வங்க காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்தது.
பிறகு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று, காவல் துறையிடம் இருந்து விசாரணையை என்ஐஏ எடுத்துக் கொண்டது. இதையடுத்து, அந்த வழக்கில் தனியே என்ஐஏ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் இதுவரை 3 பேரை என்ஐஏ கைது செய்திருந்தது. முக்கிய எதிரியாகக் கருதப்படும் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஷௌகத் முல்லா தலைமறைவாக இருந்தாா். அவரை மேற்கு வங்க மாநிலம் முழுவதும் என்ஐஏ தீவிரமாகத் தேடி வந்தது. இந்நிலையில், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் முல்லா பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
இந்தச் சோதனையின்போது ஷௌகத் முல்லா சிக்கினாா். விசாரணையில், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க முல்லா உத்தரவிட்டதும், குண்டுவெடிப்புக்குப் பிறகு அந்த இடத்தில் ஆதாரம் எதுவும் சிக்காதபடி அனைத்து தடயங்களையும் அழித்து டும்படி அங்கிருந்தோருக்கு உத்தரவிட்டதும் தெரிய வந்தது. இது அவருக்கு எதிரான முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது என என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் முல்லா ஆஜா்படுத்தப்பட்டாா். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், முல்லாவை இந்த மாதம் 19-ஆம் தேதி வரை 14 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க என்ஐஏக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது.







