ராஜஸ்தானில் பாதுகாப்பற்ற முறையில் பூச்சிகொல்லிகள் பயன்படுத்தி இரு ஆண்டுகளில் 535 விவசாயிகள் பலியானதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தானில் பூச்சிகொல்லிகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமீன் காக்ஸி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராஜஸ்தான் விவசாயத் துறை அமைச்சகம், ஜனவரி 2024 முதல் ஜனவரி 2026 வரை 535 விவசாயிகள் பூச்சிகொல்லி பயன்படுத்துகையில் பலியானதாகத் தெரிவித்துள்ளது.
பலியானோரின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை முதல்வரின் விவசாயிகள் நலத்திட்டத்தின் கீழ் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பூச்சிகொல்லி தெளிக்கையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கத் தவறுவது, அவற்றைக் கண்மூடித்தனமாகவும் பாதுகாப்பற்ற முறையிலும் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் விவசாயிகள் பலியாவதாகக் கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் மாவட்டங்கள் வாரியான கணக்கெடுப்பில் பிகானெர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 57 பேரும், சுருவில் 56 பேரும், ஹனுமன்கரில் 42 பேரும், ஜாலாவாரில் 42 பேரும், ஜோத்பூரில் 38 பேரும், ஸ்ரீகங்காநகர் மற்றும் பேவாரில் தலா 31 பேரும் பலியானதாகத் தரவுகள் குறிப்பிடுகின்றன.
1968-ஆம் ஆண்டு பூச்சிகொல்லிகள் சட்டம் மற்றும் 1971-ஆம் ஆண்டு பூச்சிக்கொல்லிகள் விதிகளின் கீழ் இழப்பீடு வழங்க எந்த விதியும் இல்லையென்றாலும் மாநில அரசின் நலத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதை பதிலில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனவரி 2024 முதல் ஜனவரி 2026 வரை 5521 பூச்சிகொல்லிகளின் மாதிரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட தரச் சோதனைகளில் தரச் சோதனைகளில் 189 மாதிரிகள் தரம் குறைந்தவையாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றிற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட பூச்சிகொல்லிகள் விற்பனை செய்யப்படுவதாக எங்கும் புகார் எழவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதிலுக்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ் எம்.எல்.ஏ., “தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகளும், அரசால் அறிவிக்கப்பட்ட தரமற்ற பூச்சிகொல்லி மாதிரிகளின் எண்ணிக்கையும், இதுதொடர்பான கண்காணிப்பு மற்றும் பயிற்சிகளை அதிகப்படுத்துவதன் அவசியத்தைக் காட்டுகின்றது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகவும், அதுசார்ந்த உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாகவும் விவசாயத் துறை சார்பில் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Data indicates that 535 farmers in Rajasthan died over a two-year period due to the unsafe use of pesticides.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








