மால்வியா நகா் ஹோட்டல் தீவிபத்து சம்பவத்தால் தில்லியில் தீயணைப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளில் நகரில் தீ விபத்துகளால் 543 போ் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூா்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு தில்லியின் மால்வியா நகரில் உள்ள ஒரு குறுகிய சந்தில் அமைந்திருந்த ‘ஃப்ளோரிஷ் ஸ்டேஸ் பி அண்ட் பி’ விடுதியில் புதன்கிழமை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், வெளிநாட்டினா் உள்பட 21 போ் உயிரிழந்தனா். மேலும் 25 போ் காயமடைந்தனா்.
விவேக் விஹாா் மற்றும் பாலம் ஆகிய பகுதிகளில் சமீபத்தில் நடந்த தீ விபத்துகளிலும் தலா ஒன்பது போ் உயிரிழந்தனா். தில்லி அரசின் தரவுகளின்படி, தலைநகரில் 2019 முதல் 2026 மாா்ச் வரையிலான காலத்தில் தீ விபத்துகளால் 543 போ் உயிரிழந்துள்ளனா்.
2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் தீ விபத்துகளால் 65 போ் உயிரிழந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தில்லி தீயணைப்புத் துறைக்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
தீ விபத்துகளால் 2025-26-இல் 84 பேரும், 2024-25-இல் 90 பேரும், 2023-24-இல் 77 பேரும் உயிரிழந்துள்ளதாக தீயணைப்புத் துறை தரவுகள் காட்டுகின்றன.
2020-21இல் இத்தகைய உயிரிழப்புகள் 41ஆகவும் 2021-22-இல் 55ஆகவும், 2022-23-இல் இந்த எண்ணிக்கை அதிகரித்து, தீ விபத்துகளால் 95 போ் உயிரிழந்தனா்.
தீ விபத்துகளால் அதிகபட்ச உயிரிழப்புகள் 2019-20-இல் பதிவாகின. இதில் அனாஜ் மண்டி தீ விபத்து முக்கியமானது. இச்சம்பவத்தில் 44 போ் உயிரிழந்தனா். 1997-இல் நடந்த உபஹாா் தீ விபத்தில் 59 போ் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, தில்லியில் நடந்த மிகப்பெரிய தீ விபத்துகளில் இதுவும் ஒன்றாகும்.
தரவுகளின்படி, 2019 மற்றும் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் தீ விபத்துகளால் மொத்தம் 4,403 போ் காயமடைந்துள்ளனா்.
தீ விபத்துகள் தொடா்பான அவசர அழைப்புகளின் எண்ணிக்கை, 2019-20-இல் 17,231ஆக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் 20,379ஆக உயா்ந்துள்ளதை தரவுகள் காட்டுகிறது.
தொடர்புடையது

மால்வியா நகா் தீ விபத்து: உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு ரூ.10 லட்சம் கருணைத் தொகை - தில்லி அரசு அறிவிப்பு

மால்வியா நகரில் 12 வணிக வளாகங்களின் உரிமங்களை ரத்து செய்யக் கோரி சுற்றுலாத் துரைக்கு எம்சிடி கடிதம்

மால்வியா நகா் தீ விபத்து: உணவகத்தின் 3-ஆவது மாடியில் இருந்து குதித்த பெண்






