இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டுமே தவிர கேள்வி கேட்கக் கூடாது என்பதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூன் 7) தெரிவித்தார்.
சிபிஎஸ்இ தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என சர்தாக் சிதாந்த், நிசார்கா அதிகாரி இரண்டு இளைஞர்கள் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடந்து சிபிஎஸ்இ தேர்வுகளின் குளறுபடிகள் வெளிச்சத்திற்கு வந்தன.
இதனைத் தொடர்ந்து, கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவால் சர்தாக் அழைக்கப்பட்டு, அவரின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. மேலும், சர்காத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்த சிபிஎஸ்இ அதிகாரிகள், மறுமதிப்பீட்டு இணையதளச் சிக்கல்கள் சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், விண்ணப்பிக்க மாணவர்களுக்குப் போதுமான அவகாசம் உள்ளதாகவும் உறுதியளித்தனர்.
இந்நிலையில், மாணவர் சர்தாக்கையும் அவரின் வழக்குரைஞரையும் அழைத்து மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாராட்டினார்.
அவருடனான சந்திப்பு குறித்து ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது:
சார்தக்கிற்கு வயது 18 தான். இருப்பினும், மன உறுதி, துணிச்சல் மற்றும் கொள்கைப்பிடிப்பு ஆகியவற்றில் அவருக்கு நிகர் யாரும் இல்லை.
நாட்டின் முன்னணி ஊடக நிறுவனங்களாலும் புலனாய்வுப் பத்திரிகையாளர்களாலும் கூடச் செய்ய முடியாத ஒன்றை அவரும் அவரது நண்பர் சர்தாக்கும் சாதித்துக் காட்டினர். சிபிஎஸ்இ கூட்டுச் சதியை அவர்கள் நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினர்.
கேள்விகள் கேட்காமலும், கண்களைத் திறக்காமலும் நம் இளைஞர்கள் தொடர்ந்து ரீல்ஸ் செய்துகொண்டும், பக்கோடா பொரித்துக்கொண்டும் இருக்க வேண்டும் என்றே மோடி விரும்புகிறார். ஆனால், இந்த இளைஞர்கள் கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்கான விடைகளையும் கண்டறிந்தனர்.
நாட்டைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் சிபிஐ புலனாய்வு அமைப்புகளை விடவும் விரைவாகவும் கூர்மையாகவும் செயல்பட்டுத் தன் திறனை நிரூபித்துள்ளார். இளைஞர்களின் இந்த வெற்றி, அரசுக்கு உண்மையான ஒரு தோல்வியாகும்.
இதுதான் இந்தியாவின் உண்மையான இளைஞர் சக்தி. ஆர்வமும், விழிப்புணர்வும், தெளிவான புரிதலும் கொண்ட சக்தி. நினைவில் கொள்ளுங்கள், நாட்டின் எதிர்காலம் ஒருபோதும் தவறான பாதையில் திசைதிருப்பப்படாது எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








