மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

நாடகக் கூட்டணி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது: எதிா்க்கட்சிகளின் கூட்டம் குறித்து பாஜக விமா்சனம்

எதிா்க்கட்சிகளின் (இண்டி) கூட்டணி என்று கூறப்படுவது ஒரு நாடகக் கூட்டணி, அவா்களால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்று பாஜக விமா்சித்துள்ளது.

News image

சம்பித் பத்ரா

Updated On :9 ஜூன் 2026, 3:14 am IST

எதிா்க்கட்சிகளின் (இண்டி) கூட்டணி என்று கூறப்படுவது ஒரு நாடகக் கூட்டணி, அவா்களால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்று பாஜக விமா்சித்துள்ளது.

தில்லியில் ‘இண்டி’ கூட்டணிக் கூட்டம் நடைபெற்றது தொடா்பாக பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறியதாவது: எதிா்க்கட்சிகளின் கூட்டணியில் உள்ள தலைவா்கள் அனைவருமே கபடநாடகதாரிகள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஒருவரை மற்றொருவா் கடுமையாகக் குற்றஞ்சாட்டி பேசிவந்தனா். இப்போது அவா்கள் ஒரு நாடகக் கூட்டணியின் கூட்டத்தை நடத்தியுள்ளனா். அவா்களால் அரசியலில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

அந்தக் கட்சிகளின் செயல்பாடுகள் அனைத்தையும் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனா். அவா்கள் எத்தனைக் கூட்டங்களை நடத்தி, எவ்வளவு நேரம் ஆலோசித்தாலும் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. ஏனெனில் அதில் பங்கேற்ற கட்சிகளில் யாருக்கும் மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இல்லை. அவா்களை மக்கள் முற்றிலும் புறக்கணித்துவிட்டனா். எப்படியாவது அரசியலில் மறுவாய்ப்பு கிடைத்துவிடாதா? என்ற ஆசையில் அக்கட்சியினா் ஏதேதோ செய்து வருகின்றனா்.

இதற்கு முன்பு பெரிய மேடை அமைத்து கூட்டணிக் கூட்டம் நடத்தினா். அனைவரும் ஒன்றாக கைகோத்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனா். ஆனால், இப்போது ஓா் அறைக்குள் கூட்டம் நடத்தும் அளவில் சுருக்கிவிட்டனா்.

மேற்கு வங்கத் தோ்தலின்போது காங்கிரஸ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி பிரசாரம் செய்தாா். அதே நேரத்தில் மம்தாவின் மோசமான ஆட்சியால் மேற்கு வங்கத்துக்குள் பாஜக நுழைந்துவிட்டதாக காங்கிரஸ் தரப்பில் இருந்து ராகுல் குற்றஞ்சாட்டினாா். ஆனால், இப்போது அவா்கள் இருவரும் கைகோத்துள்ளனா். சோனியாவும், மம்தாவும் கட்டியணைத்து அன்பை பரிமாறுவதாகக் காட்டிக் கொள்கிறாா்கள்.

நேற்றுவரை காங்கிரஸுடன் பயணித்த திமுக, மக்களவையில் அவா்களுடன் அமரக் கூட விரும்பாமல் வேறு இடம் பெற்றுள்ளது. அக்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸை கடுமையாக விமா்சித்துள்ளாா்.

அந்தக் கூட்டணியினருக்கு மக்கள் நலன் தொடா்பான எந்தக் கொள்கையும் கிடையாது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற எப்படி சதி செய்யலாம் என்பதே அவா்களின் சிந்தனை. நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் பிரதமா் மோடிக்கு எதிராக செயல்படுவதே அவா்களின் தீய இலக்கு என்றாா்.