ஹரியாணா மாநிலம் ஹன்ஸி பகுதியில், இளைஞர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்த உடற்பயிற்சிக் கூட உரிமையாளர் பட்டப் பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஃபப்ரா சௌக் பகுதியில், வீட்டின் வாசற்படியில், மாணவர்கள் உடல் பயிற்சி செய்ய சாலையில் நின்றபடி பயிற்சிக் கொடுத்துக் கொண்டிருந்த கபில் என்பவரை, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.
இந்த சம்பவம் வியாழக்கிழமை காலையில் நடைபெற்றுள்ளது. மோட்டார் வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு பேரில் பின்னால் அமர்ந்திருந்தவர் வாகனத்தில் இருந்து இறங்கி கபிலை நோக்கி 5 வினாடிகளில் 10 சுற்றுகளை துப்பாக்கியால் இயக்குகிறார்.
கபிலை மிக அருகே தலை மற்றும் முதுகுப் பகுதியில் குறிவைத்து சுட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவத்தின்போது, அருகில் பயிற்சி செய்துகொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு துப்பாக்கிக் குண்டு பாய்ந்து படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகொலையை நிகழ்ச்சிய குற்றவாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினர். கொலை குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், கபிலின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஹரி பாக்ஸர், வெளியிட்ட ஆடியோ தகவலில், இந்தக் கொலைச் சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாகவும், இருவேறு கும்பல்களுக்கு இடையேயான முன்பகை காரணமாக இந்த படுகொலை நடந்திருப்பதாகவும், இதுபோன்ற படுகொலைகள் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Summary
Gym trainer shot dead! Bishnoi gang warns of more attacks
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









