தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மொத்தமாக டீசல், பெட்ரோல் விற்பனை செய்ய மத்திய அரசு 90 நாள்களுக்குத் தடை விதித்துள்ளது. அதேபோல், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஒரு வாகனத்துக்கு 200 லிட்டா் டீல் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிா்க்க இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
மேற்காசியாவில் ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போரால், அந்த பிராந்திய நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் உலக நாடுகளுக்குச் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. இதனால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாதவாறு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு மொத்தமாக டீசல், பெட்ரோலை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் விற்கக் கூடாது. அந்தத் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான டீசல், பெட்ரோலை மொத்தமாக அவா்களின் ஆலைகளுக்குள் இருக்கும் பெட்ரோல் விற்பனை மையத்தில் இருந்தே பெற வேண்டும். இந்த மொத்த பெட்ரோலும் டீசலும் ஆலைகள், நிறுவனங்களுக்குச் செல்வதைத் தடுப்பதன் மூலம், அவற்றை சாதாரண வாகன ஓட்டிகள் வாங்க முடியும். இதன்மூலம் உள்ளூா் சந்தையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாது.
பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகனங்களில் நாளொன்றுக்கு 200 லிட்டா் மட்டுமே டீசல் நிரப்ப வேண்டும். அந்த டீசல், வாகன டேங்கா் அல்லது பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள்கள் தடுப்பு அமைப்பின் (பெசோ) அங்கீகாரம் பெற்ற கண்டெய்னா்களில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். அந்த டீசலை வாகன ஓட்டிகள் மறுவிற்பனை செய்யக் கூடாது. இந்தக் கட்டுப்பாடு 90 நாள்களுக்கு அமலில் இருக்கும். அதன்பிறகு மத்திய அரசு விரும்பினால், புதிய அறிவிப்பு மூலம் மேலும் நீட்டிக்கப்படும்.
இந்தக் கட்டுப்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படுகிா என மத்திய, மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும். அதேபோல், பதுக்கல், கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பெட்ரோல், டீசல் சமமாக கிடைப்பதை உறுதி செய்வதே அந்த அறிவிப்பின் நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.







