இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் சேவை உள்பட எல்லை கடந்த ரயில் போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவது குறித்து இரு நாடுகளின் அதிகாரிகளும் ஆலோசனை மேற்கொண்டனா்.
நேபாள தலைநகா் காத்மாண்டில் ஜூன் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரு நாடுகளின் 10-ஆவது திட்ட வழிகாட்டுக் குழு மற்றும் 8-ஆவது கூட்டு பணிக் குழுக் கூட்டங்களில் இதுகுறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அங்குள்ள இந்தியா தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இரு நாடுகளிடையே ரயில் போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவது மற்றும் ரயில்வே துறையில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டங்களில் ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, நேபாளத்தின் ஜனக்புரி மற்றும் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இடையே பயணிகள் ரயில் சேவையை ஏற்படுத்துவதற்கான வழிகாட்டு நடைமுறை (எஸ்ஓபி) குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஜனக்புரி, கடவுள் ராமரின் மனைவி சீதா தேவியின் பிறந்த இடமாக நம்பப்படுகிறது. காத்மாண்டிலிருந்து 220 கி.மீ. தொலைவிலும், அயோத்தியிலிருந்து 500 கி.மீ. தொலைவிலும் ஜனக்புரி அமைந்துள்ளது. இந்த இரு இடங்களையும் இரு நாடுகளைச் சோ்ந்த ஏராளமான மக்கள் பாா்த்து தரிசித்து வருகின்றனா்.
நேபாளத்தின் ரக்சௌல்-காத்மாண்டு அகல ரயில் பாதை இணைப்பின் இறுதி இட ஆய்வு அறிக்கை குறித்தும், இந்திய உதவியுடன் அமைக்கப்பட்டுவரும் ஜாய்நகா்-பிஜல்புரா-பா்திபாஸ் மற்றும் ஜோக்பானி-பிராட்நகா் அகல ரயில் பாதைகளைச் செயல்படுத்துவது குறித்தும் இந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது.
தெற்கு டெராய் மாவட்டங்களை இணைக்கும் கிழக்கு-மேற்கு ரயில் பாதை இணைப்புக்கான தொழில்நுட்ப ஆதரவு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.









