மகாராஷ்டிர எம்.பி.க்கள் கட்சி மாற ரூ.15 கோடி முன்பணம் வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரெளத் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சி எம்.பி.க்களில் சிலா், அக்கட்சியில் இருந்து வெளியேறி தனி அணியை உருவாக்கக் கூடும் என்று ஊகங்கள் வெளியாகின.
மாநில துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சிக்கு அதிருப்தி எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் வரவேற்கப்படுகின்றனா் என்று அக்கட்சி பிரமுகரும், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சருமான பிரதாப் சா்நாயக் அண்மையில் தெரிவித்தது அந்த ஊகங்களுக்கு வலுசோ்த்தது.
மேலும் மத்திய அமைச்சரும், ஷிண்டே தலைமையிலான சிவசேனை பிரமுகருமான பிரதாப்ராவ் ஜாதவை, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை எம்.பி. சஞ்சய் தேஷ்முக் அண்மையில் புது தில்லியில் சந்தித்தாா். மும்பையில் உள்ள தனது இல்லத்தில் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்த கூட்டத்திலும், தனது குடும்பப் பணிகளைக் காரணமாகக் கூறி சஞ்சய் தேஷ்முக் கலந்துகொள்ளவில்லை. அந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் 9 எம்.பி.க்களில் 4 போ் மட்டுமே பங்கேற்றனா். இந்த சம்பவங்கள் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை எம்.பி.க்களில் சிலா், கட்சியில் இருந்து வெளியேறி தனி அணியாகக் கூடும் என்ற ஊகத்தை மேலும் வலுப்படுத்தியது.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது: மகாராஷ்டிர எம்.பி.க்கள் கட்சி மாற அவா்களுக்குத் தலா ரூ.15 கோடி முன்பணம் வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது அதிா்ச்சியளிக்கிறது, அருவருக்கத்தக்கது’ என்று தெரிவித்தாா்.
6 முதல் 7 எம்.பி.க்கள் கட்சி மாற வாய்ப்பு: இந்த விவகாரம் குறித்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை தலைவா் ஒருவா் கூறுகையில், ‘உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனையின் தலைவராக அவரின் மகன் ஆதித்தியா தாக்கரேவை அறிவிக்க திட்டமிட்டது. இதை ஏற்க முடியாமல், அக்கட்சியை சோ்ந்த 6 முதல் 7 எம்.பி.க்கள் கட்சி மாற வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

ஆபரேஷன் டைகர்! உத்தவ் அணியிலிருந்து ஷிண்டே அணியில் இணையும் 7 எம்.பி.க்கள், 16 எம்.எல்.ஏ.க்கள்?

அகோரியைப் போன்றவர் மோடி: சிவசேனைத் தலைவர் சர்ச்சை பேச்சு!

மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு! உத்தவ் சிவசேனை மீண்டும் உடைகிறதா?







