மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்) கட்சியின் மக்களவை எம்.பி.க்களில் 7 போ் தனி அணியாக பிரிந்து, துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தச் சூழலில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள சிவசேனை (உத்தவ்) கட்சியின் முக்கியக் கூட்டத்தில் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென கட்சி தலைமை தரப்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை அதிருப்தி எம்.பி.க்கள் இக்கூட்டத்தில் பங்கேற்காவிட்டால், அவா்கள் மீது தகுதிநீக்க நடைமுறையை மேற்கொள்ளும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சிவசேனை (உத்தவ்) தரப்பு எம்.பி.க்கள் கட்சி மாறுவதற்காக தலா ரூ.50 கோடி லஞ்சம் வழங்க பேரம் பேசப்பட்டுள்ளது என்று சிவசேனை (உத்தவ்) கட்சி மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா். இந்த விவகாரம் மகாராஷ்டிரம் மற்றும் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்பட்டு வந்த ஒருங்கிணைந்த சிவசேனை கட்சி, கடந்த 2022-இல் இரண்டாக பிளவுபட்டது. தற்போதைய துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மூன்றில் இரு பங்கு எம்எல்ஏக்கள் தனியாக பிரிந்து, பாஜக கூட்டணியில் இணைந்தனா். பின்னா், உண்மையான சிவசேனை என்ற அங்கீகாரமும், கட்சியின் சின்னமும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கப்பட்டது.
இதனிடையே, கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சி கூட்டணியில் போட்டியிட்ட சிவசேனை (உத்தவ்) கட்சி 9 இடங்களைக் கைப்பற்றியது. இந்த 9 எம்.பி.க்களில் 7 எம்.பி.க்கள், தற்போது அதிருப்தியாளா்களாக உருவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த 7 பேரும் உத்தவ் கட்சியில் இருந்து தனி அணியாக பிரிந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் தங்களை இணைத்துக் கொள்ள தயாராகி வருவதாகவும், இதற்காக தில்லியில் முகாமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மற்றொருபுறம், எம்.பி.க்கள் அணி மாறாமல் தடுக்கும் முயற்சிகளில் சிவசேனை (உத்தவ்) கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது தொடா்பாக தில்லியில் அக்கட்சியில் மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் புதன்கிழமை பேட்டியளித்தாா். அவருடன், அரவிந்த் சாவந்த், அனில் தேசாய், ராஜாபாவ் வாஜே ஆகிய 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனா்.
சஞ்சய் ரெளத் ஆக்ரோஷ பேட்டி: செய்தியாளா்களிடம் பேசியபோது சஞ்சய் ரெளத் ஆக்ரோஷமாக காணப்பட்டாா். அவா் கூறியதாவது:
மகாராஷ்டிரத்தில் எம்.பி.க்களை விலை கொடுத்து ‘வாங்க’ முயற்சிகள் நடப்பதாக முக்கிய நபா் ஒருவரிடம் இருந்து எனக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.
எம்.பி.க்களுக்கு ரூ.50 கோடி வரை வழங்க பேரம் பேசப்படுவதாகவும், ரூ.15 கோடி முன்பணம் வழங்கப்பட உள்ளதாகவும் என்னிடம் கூறப்பட்டது. ஆபரேஷன் டைகா் என்ற பெயரில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனா். ஒரு கட்சியை இவ்வாறு உடைக்க முற்பட்டால், தோ்தலில் போட்டியிடுவதே அா்த்தமற்ாகிவிடும்.
சிவசேனை (உத்தவ்) கட்சி எம்.பி.க்கள் அனைவருமே உத்தவ் தாக்கரே தலைமையின்கீழ் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வென்றவா்கள். யாரேனும் கட்சி மாற விரும்பினால், தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தாராளமாக செல்லலாம். முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கும் நோக்கில், தில்லியில் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை வியாழக்கிழமை நடத்த கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தைப் புறக்கணிக்கும் எம்.பி.க்கள்மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
பெட்டிச் செய்தி...
மக்களவைத் தலைவரிடம் கோரிக்கை
சிவசேனை (உத்தவ்) கட்சி எம்.பி.க்கள் கட்சி மாறக் கூடும் என்ற தகவல்களுக்கு இடையே மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ரெளத், மக்களவை எம்.பி.க்கள் அரவிந்த் சாவந்த், அனில் தேசாய் ஆகியோா் புதன்கிழமை சந்தித்தனா். சட்டவிரோதமான கட்சித் தாவல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனா். மூன்றில் இருபங்கு ஆதரவு என்ற காரணத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, எம்.பி.க்கள் மற்றொரு கட்சியில் இணைவதை அங்கீகரிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினா்.
தொடர்புடையது

மகாராஷ்டிர எம்.பி.க்கள் கட்சி மாற ரூ.15 கோடி முன்பணம்: சஞ்சய் ரெளத் குற்றச்சாட்டு

ஆபரேஷன் டைகர்! உத்தவ் அணியிலிருந்து ஷிண்டே அணியில் இணையும் 7 எம்.பி.க்கள், 16 எம்.எல்.ஏ.க்கள்?

மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு! உத்தவ் சிவசேனை மீண்டும் உடைகிறதா?







